இந்தியா

4 வயது குழந்தை, விவாகரத்து வழக்கு: நண்பருடன் ஏற்பட்ட கர்ப்பத்தை கலைக்க நீதிமன்றத்தை நாடிய பெண்

Published On 2024-07-02 13:51 GMT   |   Update On 2024-07-02 13:51 GMT
  • தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட மன அழுத்தத்தின் காரணமாக, மாதவிடாய் சுழற்சியை தவறவிட்டபோது அதிக கவனம் செலுத்தவில்லை.
  • அதனால் தான் கர்ப்பம் தரித்ததை காலம் கடந்த நிலையில் தெரிந்து கொண்டதாகவும் தெரிவித்திருந்தார்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ஏற்கனவே நான்கு வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில் 28 வயது பெண் ஒருவர், தன்னுடைய கணவருடன் கருத்து வேறுபாட்டால் விவாகரத்து கேட்டுள்ள நிலையில், நண்பவருடன் நெருங்கி பழகி கர்ப்பமாகிய நிலையில், அது தேவையற்ற கர்ப்பம், அதை கலைக்க அனுமதி வழங்க வேண்டும் என நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

மனுதாரருக்கு தேவையற்ற கர்ப்பம் ஏற்பட்டால், மன மற்றும் உடல் உபாதைகள் மற்றும் அதிர்ச்சிகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனால் கர்ப்பத்தை கலைக்க அனுமதி வழங்க வேண்டும் என அந்த பெண் மனுவில் தெரிவித்துள்ளார்.

அந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட மும்பை உயர்நீதிமன்றம், மருத்துவக்குழு அந்த பெண்ணை சோதனை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கடந்த வாரம் உத்தரவிட்டது.

அதன்படி மெடிக்கல் குழு அறிக்கை தாக்கல் செய்தது. அப்போது கரு கலைக்கப்படுவதற்கு ஆதரவாக அறிக்கை இல்லை என நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், அந்த பெண்ணின் வழக்கறிஞரிடம் மருத்துவக்குழுவின் அறிக்கையை பார்க்கும்படி அந்த பெண்ணிடம் தெரிவிக்கும்படி கேட்டுக்கொண்டது. மேலும் விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்துள்ளது.

மெடிக்கல் குழு கருவை கலைப்பதற்கான வேண்டுகோளை மறுத்துள்ளது. கரு கலைப்பிற்கு பெண் உடற்தகுதியாக இல்லை என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கருக்கலைப்பு நடைமுறை மூலம் அந்த பெண் ஆபத்தான் முடிவை எடுக்க வேண்டாம் என ஆலோசனை வழங்கவும் வழக்கறிஞரிடம் நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.

பெண் கருவுற்று 24 வாரங்கள் தாண்டினால், நீதிமன்றத்தின் உத்தரவின்படிதான் கருவை கலைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த பெண் தனது மனுவில் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட மன அழுத்தத்தின் காரணமாக, மாதவிடாய் சுழற்சியை தவறவிட்டபோது அதிக கவனம் செலுத்தவில்லை என்றும், அதனால் தான் கர்ப்பம் தரித்ததை காலம் கடந்த நிலையில் தெரிந்து கொண்டதாகவும் தெரிவித்திருந்தார்.

Tags:    

Similar News