இந்தியா

பெண் மருத்துவர்கள் இரவில் ஏன் வேலை செய்ய கூடாது - உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி

Published On 2024-09-17 09:37 GMT   |   Update On 2024-09-17 09:37 GMT
  • பெண்கள் சலுகைகளை எதிர்நோக்கவில்லை, சம வாய்ப்புகளையே எதிர்நோக்கியுள்ளனர்.
  • அனைத்து சூழல்களிலும் பணிபுரியவே பெண் மருத்துவர்கள் விரும்புகின்றனர்.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சஞ்சய் ராய் என்ற குற்றவாளியிடம் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரஸ் அரசு இந்த விவகாரத்தில் அலட்சியமாக செயல்பட்டுள்ளது என்று குற்றம்சாட்டி அம்மாநிலத்தில் மருத்துவர்கள் தொடர்ச்சியாக போராட்டங்கள் நடந்து வருகிறது.

செப்டம்பர் 10 ஆம் தேதி மாலைக்குள் மருத்துவர்கள் தங்களின் போராட்டங்களை கைவிட்டுவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கெடு விதித்தது. ஆனால் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறி மருத்துவர்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இன்று மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது "பாதுகாப்பை கருதி பெண் மருத்துவர்கள் இரவுப் பணியை தவிர்க்குமாறு அறிவித்த மேற்கு வங்க அரசின் உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்" என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

"பெண் மருத்துவர்கள் இரவில் பணி செய்யக்கூடாது என கூற முடியாது. பெண்கள் சலுகைகளை எதிர்நோக்கவில்லை, சம வாய்ப்புகளையே எதிர்நோக்கியுள்ளனர். அனைத்து சூழல்களிலும் பணிபுரியவே பெண் மருத்துவர்கள் விரும்புகின்றனர். பெண்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது உங்களது கடமை.

இரவுப் பணியை செய்வதை தவிர்க்குமாறு பெண் மருத்துவர்களுக்கு மேற்கு வங்க அரசு உத்தரவிட முடியாது" என்று தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார். 

Tags:    

Similar News