செய்திகள் (Tamil News)

சங்ககரா கனவு அணியில் சச்சின் இடம்பெறாதது ஏன்?

Published On 2016-06-29 16:42 GMT   |   Update On 2016-06-29 16:42 GMT
இலங்கை கிரிக்கெட் வீரர் குமார் சங்ககரா வெளியிட்ட கனவு அணிக்கு சச்சினை தேர்வு செய்யாதது குறித்து அவரே விளக்கம் அளித்துள்ளார்.
லண்டன்:

கிரிக்கெட் விளையாட்டின் முக்கிய விரர்களை தங்களின் கனவு அணியை தேர்ந்தெடுத்து வீரர்கள் பட்டியலை வழங்குமாறு, கிரிக்கெட்டின் லண்டன் லாட்ஸ் மைதான நிர்வாகம் கேட்டுக்கொண்டது. இதன்படி பல்வேறு முன்னணி வீரர்களும், தங்களின் கனவு அணி பட்டியலை வழங்கி வருகிறார்கள்.

உலகின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக புகழப்படும் இலங்கையின் குமார் சங்ககரா 11 வீரர்கள் அடங்கிய தனது கனவு அணியை வெளியிட்டுள்ளார். இந்த அணியில் சச்சினுக்கு இடம் அளிக்கப்படாதது பலரை ஆச்சரியப்பட வைத்துள்ளது.  

தலைசிறந்த பேட்ஸ்மேன், டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்களை குவித்தவர், அதிக செஞ்சூரிகளை விளாசியவர், வேகப்பந்து, சுழற்பந்து என அனைத்து வகை பந்துகளையும் துவம்சம் செய்தவர் என்ற பெருமைக்குரிய சச்சின் டெண்டுல்கரை, இலங்கை முன்னாள் வீரர், குமார் சங்ககரா இப்படி கைவிட்டு விட்டாரே அவரது ரசிகர்கள் புலம்புகிறார்கள்.

சில சச்சின் ரசிகர்கள் ஏன் சச்சினை சேர்க்கவில்லை என்று சங்ககராவிடம் டுவிட்டர் வழியாக கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதில் அளித்த அவர் “திறமையான ஒவ்வொருவரையும் சேர்க்க வாய்ப்பு இல்லை. சேவாக் மற்றும் விராட் கோலியை சேர்க்காமல் விட்டது கூட கடினமான முடிவுதான்” என்று தெரிவித்துள்ளார்.

குமார் சங்ககரா ஆல்-டைம் லெவன் (பேட்டிங் வரிசையில்): மேத்யூ ஹெய்டன், ராகுல் டிராவிட், பிரையன் லாரா, ரிக்கி பாண்டிங், அரவிந்த டி சில்வா (கேப்டன்), ஜாக் காலிஸ், ஆடம் கில்கிறிஸ்ட், ஷேன் வார்ன், முரளிதரன், வாசிம் அக்ரம் மற்றும் சமிந்தா வாஸ்.

Similar News