செய்திகள் (Tamil News)

லண்டன் ஒலிம்பிக்கில் மூன்று பேர் ஊக்கமருந்து பயன்படுத்தியது கண்டுபிடிப்பு

Published On 2017-02-01 11:37 GMT   |   Update On 2017-02-01 11:37 GMT
லண்டன் ஒலிம்பிக்கில் ஊக்கமருந்து பயன்படுத்திய மூன்று பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
2008-ம் ஆண்டு சீனாவின் பீஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக், 2012-ல் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் ஆகியவற்றில் கலந்து கொண்ட ஏராளமான வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஊக்கமருந்து பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அதனால் இரண்டு தொடரிலும் பங்கேற்ற வீரர்களிடம் இருந்து சோதனைக்காக எடுத்து வைக்கப்பட்ட மாதிரிகள் தற்போது மீண்டும் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. இந்த சோதனையில் ஏராளமானோர் ஊக்கமருந்து பயன்படுத்தியது தெரியவந்தது.

இதில் பெரும்பாலானோர் ரஷ்யாவைச் சேர்ந்தவர்கள். நமக்கு அதிர்ச்சி தரும் வகையில் ஜமைக்கா 4X100 தொடர் ஓட்டம் அணியின் உசைன் போல்டு உடன் பங்கேற்ற நெஸ்டா கார்டர் கடந்த 2008 பீஜிங் ஒலிம்பிக்கில் ஊக்கமருந்து மருந்து பயன்படுத்தியது தெரியவந்தது.

இதனால் உசைன் போல்ட் தனது தங்கப் பதக்கத்தை திருப்பியளித்துள்ளார். இந்நிலையில் 2012 லண்டன் ஒலிம்பிக்கில் பங்கேற்ற மூன்று வீரர்கள் ஊக்கமருந்து பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.

லண்டன் ஒலிம்பிக்கில் 4x400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் ரஷிய அணியில் இடம்பிடித்தவர் அன்டோனினா கிரிவ்ஷப்கா. அவர் ஊக்கமருந்து பயன்படுத்தியது தெரியவந்தது. இதனால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

துருக்கி குத்துச் சண்டை வீரர் ஆடம் கிளிச்சி, ரஷியாவின் வட்டு எறிதல் வீரர் வேரா கனீவா ஆகியோரும் ஊக்கமருந்து உட்கொண்டதாக நீக்கப்பட்டுள்ளனர்.

Similar News