செய்திகள் (Tamil News)

போக்குவரத்து போலீஸ்காரருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாகிஸ்தான் வீரர்

Published On 2017-03-03 12:16 GMT   |   Update On 2017-03-03 12:16 GMT
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேனான உமர் அக்மல் போக்குவரத்து போலீஸ் உடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்துள்ளது.
பாகிஸ்தான் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் உமர் அக்மல். கிரிக்கெட் விளையாட்டில் இவரது பெயர் எவ்வளவு பிரபலமோ, அந்தளவிற்கு விமர்சனத்திற்குள்ளாவதிலும் பெயர்போனவர்.

நேற்று லாகூரில் தனது காரில் சென்றுள்ளார். அவரது கார் நம்பர் பிளேட் போக்குவரத்து விதிமுறைக்கு மாறாக அழகான வகையில் டிசைன் செய்யப்பட்டதாக தெரிகிறது. இதனால் போக்குவரத்து போலீஸ்காரர் அவரை மறித்து இதுகுறித்து கேட்டுள்ளார். அப்போது இவருக்குமிடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து உமர் அக்மல் கூறுகையில் ‘‘போலீஸ்காரர் எனது காரை தடுத்து நிறுத்தினார். அதன்பின் கெட்டவார்த்தைகளை பயன்படுத்தினார். மேலும், காரின் நம்பர் பிளேட்டை நானே கழற்ற வேண்டும் என்று என்னிடம் கூறினார்’’ என்றார்.



உமர் அக்மல் தற்போதுதான் இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார் என்பதில்லை. இதற்கு முன் கடந்த 2014-ம் ஆண்டு டிராபிக் சிக்னலை உடைத்துச் சென்ற உமர் அக்மலை, டிராபிக் போலீஸ் தடுத்து நிறுத்தினார். அப்போது இருவருக்கும் இடையில் சண்டை நடைபெற்றது. இதற்காக உமர் அக்மல் ஒருநாள் ஜெயிலில் வைக்கப்பட்டார்.

அதேபோல் லாகூர் கடாபி கிரிக்கெட் மைதானத்திற்குள் காரை அனுமதிக்காததால் கவலாளியுடன் சண்டையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

2015-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடருக்குப்பின் உமர் அக்மல் குறித்து பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் புகார் தெரிவித்ததால், அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

Similar News