விளையாட்டு (Sports)
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி வருடாந்திர கூட்டம் மும்பையில் நடைபெறும்- ஐ.ஓ.சி. அனுமதி
இது ஒரு வரலாற்று பூர்வ தருணம் என்று மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
101 வாக்களிக்கும் உறுப்பினர்கள் மற்றும் 45 கௌரவ உறுப்பினர்களை உள்ளடக்கிய சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் வருடாந்திர கூட்டத்தை நடத்துவது தொடர்பான வாக்கெடுப்பில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
மும்பையில் இந்த கூட்டத்தை நடத்த 99 சதவீத பேர் ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து 2023ம் ஆண்டு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி வருடாந்திர கூட்டத்தை மும்பையில் நடத்த ஐ.ஓ.சி.அனுமதி அளித்துள்ளது.
ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் நகரத்தைத் தேர்ந்தெடுப்பது உள்ளிட்ட உலகளாவிய ஒலிம்பிக் இயக்கத்தின் முக்கிய செயல்பாடுகளைப் குறித்து வருடாந்திர கூட்டத்தில் விவாதித்து முடிவெடுக்கப் படுகிறது. 1983 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக இந்தியா வருடாந்திர கூட்டத்தை நடத்தவுள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்கூர், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் வருடாந்திர கூட்டம் இந்தியாவில் நடைபெறுவது வரலாற்று தருணம் என்று கூறினார்.
இந்திய விளையாட்டுத்துறை சமீபத்திய ஆண்டுகளில் மாபெரும் முன்னேற்றம் கண்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த வேண்டும் என்று நீண்ட கால கோரிக்கையின் வளர்ச்சியாக இருக்கும் என்றும் இந்திய விளையாட்டின் புதிய சகாப்தத்தை இது தொடங்கி வைக்கும் என்றும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியில் இந்தியா சார்பில் உறுப்பினராக உள்ள நீட்டா அம்பானி தெரிவித்தார்.