கிரிக்கெட் (Cricket)

ஆல் அவுட் ஆவதில் இந்தியா முன்னேற்றம் கண்டுள்ளது- கலாய்த்த மைக்கெல் வாகன்

Published On 2024-10-17 11:21 GMT   |   Update On 2024-10-17 11:21 GMT
  • நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா 46 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
  • 2020- 2021 ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா 36 ரன்னில் ஆல் அவுட் ஆனது.

இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி பெங்களூரு நேற்று தொடங்க வேண்டியது. மழையால் முதல் நாள் ரத்து செய்யப்பட்ட அந்தப் போட்டி இரண்டாவது நாளான இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய வீரர்கள் நியூசிலாந்தின் வேகத்தை சமாளிக்க முடியாமல் பெவிலியன் திரும்பினர். இதனால் வெறும் 46 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட்டானது. விராட் கோலி, சர்பராஸ் கான், ராகுல், ஜடேஜா, அஸ்வின் ஆகியோர் டக் அவுட்டானார்கள்.

நியூசிலாந்துக்கு தரப்பில் மாட் ஹென்றி 5, வில்லியம் ஓரோர்கே 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இப்போட்டியில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தங்களுடைய சொந்த மண்ணில் குறைந்தபட்ச ஸ்கோரை (46) பதிவு செய்து இந்தியா வரலாறு காணாத மோசமான சாதனை படைத்தது. அது போக 36, 42க்குப்பின் ஒட்டுமொத்த டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா தங்களுடைய 3-வது குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்தது.

இதற்கு முன்பு ஆஸ்திரேலியாவில் 2020 - 2021 பார்டர்- கவாஸ்கர் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 36க்கு ஆல் அவுட்டான இந்தியா தங்களுடைய குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்து மோசமான சாதனை படைத்தது.

இந்நிலையில் இந்திய அணி ஆல் அவுட்டாவதில் நல்ல முன்னேற்றத்தை கண்டுள்ளதாக முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் கலாய்த்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

இந்திய ரசிகர்களின் ஒளிமயமான பக்கத்தை பாருங்கள். குறைந்தபட்சம் நீங்கள் 36 ரன்களை தாண்டி விட்டீர்கள்" என்று கூறியுள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags:    

Similar News