விளையாட்டு (Sports)

செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்றது மகிழ்ச்சி- கிராண்ட் மாஸ்டர் டி.குகேஷ்

Published On 2024-09-23 05:52 GMT   |   Update On 2024-09-23 05:52 GMT
  • இந்திய அணி தங்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும்.
  • கடைசி சுற்றில் வெற்றி பெற்று தங்கம் வென்றதில் மகிழ்ச்சி.

புடாபெஸ்ட்:

அங்கேரியில் நடை பெற்ற 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய ஆண்கள் அணியும், பெண்கள் அணியும் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தது.

டி.குகேஷ், பிரக்ஞானந்தா (இருவரும் சென்னை) அர்ஜூன் எரிகேசி, விதித் குஷாத்பி, அரிகிருஷ்ணா ஆகியோர் அடங்கிய இந்திய அணி ஓபன் பிரிவிலும் வைஷாலி (சென்னை), தானியா, ஹரிகா, வந்திகா, திவ்யா ஆகியோர் அடங்கிய இந்திய பெண்கள் அணியும் தங்கப்பதக்கம் பெற்றன.

11 சுற்றுகளை கொண்ட இந்தப்போட்டியில் ஓபன் பிரிவில் 21 புள்ளிகள் எடுத்தது. 10 ஆட்டத்தில் வெற்றி பெற்றது. ஒரு சுற்று 'டிரா' ஆனது. தோல்வி எதையும் சந்திக்கவில்லை.

பெண்கள் பிரிவில் 19 புள்ளிகள் கிடைத்தது. 9 வெள்ளி பெற்றது. ஒரு சுற்றில் 'டிரா' செய்தது. ஒரு சுற்றில் தோல்வியை தழுவியது.

செஸ் ஒலிம்பியாட் வரலாற்றில் இந்திய அணி தங்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்பு ஆண்கள் அணி 2 முறையும் (2014, 2021) பெண்கள் அணி 1 தடவையும் (2022) வெண்கலப் பதக்கம் பெற்றன.

ஓபன் பிரிவில் இந்திய அணி தங்கம் வெல்ல சென்னையை சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் டி.குகேஷ் முக்கிய பங்கு வகித்தார். அவர் 8 ஆட்டங்களில் வெற்றி பெற்றார். 2 சுற்றில் 'டிரா' செய்தார். தங்கம் வென்றது குறித்து குகேஷ் கூறியதாவது:-

எனது ஆட்டத்தில் மிகுந்த முன்னேற்றத்தை காணமுடிந்தது. மேலும் அணியாக நாங்கள் விளையாடிய விதம் மகிழ்ச்சியான உணர்வை தருகிறது.

கடந்த காலங்களில் பல மோசமான தோல்விகளை தழுவி இருந்த போதிலும் இந்த முறை ஆதிக்கம் செலுத்தி தங்கம் வெல்ல முடிந்தது. நான் இப்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.


கடைசி சுற்றில் தோற்றாலும் டை பிரேக்கில் வெற்றி பெறுவோம் என்று நினைத்தேன். நிச்சயமாக போட்டியில் வெல்வதே விரும்பினேன். அதன்படி கடைசி சுற்றில் வெற்றி பெற்று தங்கம் வென்றதில் நிம்மதி அடைந்தோம். கடந்த முறை தங்கம் வெல்லும் அணியாக நெருங்கி வந்து வாய்ப்பை இழந்தோம். இந்த முறை வெற்றி பெற்றது மகிழ்ச்சியை அளித்தது.

உலக செஸ் சாம்பியன் போட்டி பற்றி நான் இப்போது யோசிக்கவில்லை. செஸ் ஒலிம்பியாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து விளையாடினோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News