கிரிக்கெட் (Cricket)

கொள்ளை அடிக்கப்பட்டதாக உணர்கிறேன்: எலிமினேட்டர் சர்ச்சை குறித்து அந்த்ரே ரஸல் ஆதங்கம்

Published On 2024-10-04 02:47 GMT   |   Update On 2024-10-04 02:47 GMT
  • அந்த்ரே ரசல் அணி 19.1 ஓவர்கள் விளையாடிய நிலையில் லைட் பழுதால் ஆட்டம் தடைபட்டது.
  • கட்ஆஃப் நேரம் முடிவதற்கு 5 நிமிடத்திற்கு முன் சரி செய்யப்பட்டதால் ஆட்டம் 5 ஓவராக குறைக்கப்பட்டது.

வெஸ்ட் இண்டீசில் கரீபியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. உள்ளூர் நேரப்படி கடந்த 1-ந்தேதி எலிமினேட்டர் போட்டி நடைபெற்றது. இதில் டிரிபான்கோ நைட் ரைடர்ஸ்- பார்படாஸ் ராயல்ஸ் அணிகள் மோதின.

அந்த்ரே ரஸல் இடம் பிடித்துள்ள டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 19.1 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்திருந்தபோது லைட்டில் (floodlights) பழுது ஏற்பட்டது. 6 கோபுர லைட்களில் 3-ல் பழுது ஏற்பட்டது. இதனால் போட்டி நிறுத்தப்பட்டது.

இத்தனை மணி நேரத்திற்குள் தொடங்கவில்லை என்றால் போட்டி கைவிடப்படும் என ஒரு நேரம் அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த நேரம் முடிவடைய 10 நிமிடம் இருக்கும்போது லைட் பழுது சரிபார்க்கப்பட்டது.

இதனால் பார்படோஸ் அணி 5 ஓவரில் 60 ரன்கள் அடித்தால் வெற்றி என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. டேவிட் மில்லர் 17 பந்தில் 50 ரன்கள் அடிக்க பார்படோஸ் ராயல்ஸ் 4.2 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 64 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இதனால் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் வீரர்கள் ஏமாற்றம் அடைந்தனர். குறிப்பாக அந்த்ரே ரஸல் கடும் ஏமாற்றம் அடைந்தார். இந்த நிலையில் இந்த முடிவை கொள்ளையடிக்கப்பட்டதாக உணர்கிறேன் என ரஸல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அந்த்ரே ரசல் வெளியிட்டுள்ள இஸ்டாகிராம் ஸ்டோரியில் "இணையத்தில் வந்து கருத்து தெரிவிக்கும் நபர் நான் அல்ல. என்னுடைய கருத்தின்படி இந்த வருட கரீபியன் பிரீமியர் லீக் கொள்ளை அடிக்கப்பட்டதாக உணர்கிறேன்.

லைட் சூழ்நிலை ****ry. கட்ஆஃப் நேரம் முடிவடைவதற்கு சற்று முன் லைட் வந்தது மேலும் ****ry. அதனை விட 30 பந்தில் 60 ரன்கள் என்பது மிகப்பெரிய ****ry. இது உண்மையான ****ry என நான் கருதுகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News