கிரிக்கெட் (Cricket)
null

டெஸ்ட் கிரிக்கெட்க்கு முன்னுரிமை- ஜெய் ஷா

Published On 2024-08-29 07:37 GMT   |   Update On 2024-08-29 09:03 GMT
  • 2028-ம் ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம்பெறுவது வரலாறாக இருக்கும்.
  • மகளிர் கிரிக்கெட் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் மேம்பாடு சார்ந்தும் கவனம் செலுத்தப்படும்.

சென்னை

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ) செயலாளரும், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் மகனுமான ஜெய்ஷா ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) தலைவராக ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

35 வயதான அவர் டிசம்பர் 1-ந்தேதி ஐ.சி.சி. தலைவராக பொறுப்பேற்கிறார். இளம் வயதில் ஐ.சி.சி. தலைவர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று ஜெய்ஷா கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

டி20 போட்டி அனைவருக்கும் உற்சாகம் அளிக்கும் வடிவமாக இருக்கலாம். ஆனாலும் கிரிக்கெட்டின் அடித்தளமான டெஸ்ட்க்கு எனது பதவிக்காலத்தில் முன்னுரிமை அளிக்கப்படும். எங்கள் முயற்சிகள் மற்றும் பணிகள் அதை சார்ந்து இருக்கும்.

உலகம் முழுவதும் கிரிக்கெட்டின் தரத்தை உயர்த்தும் வகையில் என்னால் முடிந்த அனைத்து பணியையும் செய்வேன். இந்த முக்கிய பொறுப்பில் என் மீது உள்ள எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வேன்.

2028-ம் ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம்பெறுவது வரலாறாக இருக்கும். ஐ.சி.சி.க்கு தலைமை தாங்குவது சிறப்பானது. மகளிர் கிரிக்கெட் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் மேம்பாடு சார்ந்தும் கவனம் செலுத்தப்படும்.

இவ்வாறு ஜெய்ஷா கூறியுள்ளார்.

Tags:    

Similar News