கிரிக்கெட் (Cricket)

ஷாகிப் அல் ஹசன் நாடு திரும்பினால் துன்புறுத்தப்பட மாட்டார் - வங்கதேச கிரிக்கெட் வாரியம்

Published On 2024-09-24 11:31 GMT   |   Update On 2024-09-24 11:31 GMT
  • ஷேக் ஹசீனா கட்சியின் எம்பியாக ஷகிப் அல் ஹசன் இருந்தார்.
  • மாணவர்கள் போராட்டத்தின் போது ஷகிப் அல் ஹசன் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட, பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது. இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனுஸ் உள்ளார்.

மாணவர்கள் போராட்டத்தின் போது நடந்த கலவரத்தில் ரபிகுல் இஸ்லாம் என்பவரின் மகன் ஆகஸ்ட் 5-ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் சுமார் 150-க்கு மேற்பட்ட நபர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அதில் ஷகிப் அல் ஹசன் பெயரும் இடம் பெற்றுள்ளது.

மாணவர்கள் போராட்டத்திற்கு முன்பு வரை வங்கதேசத்தை ஆண்ட அவாமி லீக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக ஷகிப் அல் ஹசன் இருந்தார். பின்பு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்பு அவர் வங்கதேசத்திற்கு திரும்பவில்லை.

கலவரத்தின்போது கனடாவில் நடந்த குளோபல் டி20 லீக்கில் ஷகிப் அல் ஹசன் விளையாடி கொண்டிருநதார். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்பு வெளிநாடுகளில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமே விளையாடி வரும் அவர் சொந்த நாட்டிற்கு திரும்பவில்லை. .

இந்நிலையில், கிரிக்கெட் வீரர் ஷாகிப் அல் ஹசன், நாடு திரும்பினால் எந்த துன்புறுத்தலும் இருக்காது என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் உறுதி அளித்துள்ளது.

இதனையடுத்து, அடுத்த மாதம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக வங்கதேசத்திற்கு ஷகிப் அல் ஹசன் திரும்ப உள்ளார் என்று சொல்லப்படுகிறது.

Tags:    

Similar News