செய்திகள்

தேசூரில் டிராவல்ஸ் அதிபர் வீட்டில் 30 பவுன் நகை-பணம் கொள்ளை

Published On 2016-06-29 09:30 GMT   |   Update On 2016-06-29 09:30 GMT
தேசூரில் டிராவல்ஸ் அதிபர் வீட்டில் 30 பவுன் நகை-பணம் கொள்ளை போன சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பையும், மக்கள் மத்தியில் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சேத்துப்பட்டு:

சேத்துப்பட்டு அருகே உள்ள தேசூர் நல்லதண்ணி குளம் தெருவை சேர்ந்தவர் புஷ்பா. இவரது மகன் ராஜ துரை (வயது 30). இவருக்கு கடந்த 40 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. மனைவி பெயர் ராகினி.

ராஜதுரை சென்னை கோயம்பேடு பஸ் நிலையம் அருகே டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். ராஜதுரை தனது மனைவியுடன் சென்னையில் வசிக்க முடிவு செய்தார்.

இதற்காக அவர் அங்கு வாடகைக்கு வீடு பார்த்தார். கடந்த 25-ந் தேதி அந்த வீட்டில் பால் காய்ச்ச முடிவு செய்தார். இதற்காக தேசூரில் உள்ள வீட்டை பூட்டிவிட்டு தாய் புஷ்பா, மனைவி ராகினி ஆகியோருடன் ராஜதுரை சென்னைக்கு சென்றார்.

இந்த நிலையில் நேற்று மாலை தேசூரில் உள்ள வீடு திறந்து கிடந்தது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினரும், உறவினர்களும் ராஜதுரையின் தாய் புஷ்பா ஊருக்கு வந்திருக்கலாம் என்று நினைத்தனர். எனவே அவரை அழைத்து பார்த்தனர். ஆனால் சத்தம் இல்லை.

இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினரும், உறவினர்களும் ராஜதுரைக்கு போன் செய்தனர். வீட்டில் கதவு திறந்து கிடக்கிறது. அம்மா வீட்டில் இல்லையா? என்று கேட்டனர்.

அதிர்ச்சி அடைந்த ராஜதுரை அம்மா சென்னையில் தானே இருக்கிறார். வீட்டை நாங்கள் பூட்டிவிட்டுதான் வந்தோம் என்றார். இதனால் வீட்டுக்குள் யாரோ புகுந்திருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து ராஜதுரை குடும்பத்துடன் சென்னையில் இருந்து தேசூருக்கு வந்தார்.

வீட்டில் சென்று பார்த்த போது கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு துணிகள், பொருட்கள் சிதறி கிடந்தது.

அதில் இருந்த 30 பவுன் நகை, வெள்ளி கொலுசு, ரூ. 5 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை யாரோ மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதன் மதிப்பு ரூ. 6 லட்சம் இருக்கும் என்று தெரிகிறது. இது குறித்து தேசூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

வந்தவாசி போலீஸ் துணை சூப்பிரண்டு பாலச்சந்ர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் பதிவு செய்யப்பட்டது.

இது குறித்து தேசூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணம் திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பையும், மக்கள் மத்தியில் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Similar News