ஜல்லிக்கட்டு மீதான தடையை நீங்கக்கோரி அரசமரம்-வேப்பமரத்துக்கு கல்யாணம்
விக்கிரவாண்டி:
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி தமிழகம் முழுவதும் மாணவர்கள் எழுச்சி போராட்டத்தில் ஈடுபட்டனர். மெரீனாவில் நடந்த போராட்டம் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் ஜல்லிக்கட்டு மீதான தடை நிரந்தரமாக நீங்கக்கோரி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் பொதுமக்கள் வேப்ப மரத்துக்கும்- அரச மரத்துக்கும் திருக்கல்யாணம் நடத்தினர்.
திருமணத்தை முன்னிட்டு பத்திரிகை அச்சடித்து பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. விக்கிரவாண்டி கக்கன் நகரில் நடைபெற்ற இந்த திருமணத்தையொட்டி யாக சாலையில் கணபதி ஹோமம் நடந்தது.
அதைத்தொடர்ந்து மேளதாளங்களுடன் சீர் வரிசை பொருட்கள் எடுத்து வரப்பட்டது.
பின்னர் அரச மரம்- வேப்பமரத்துக்கு பட்டு வேட்டி-சேலை கட்டப்பட்டு மாலை அணி விக்கப்பட்டது. தொடர்ந்து திருமாங்கல்யம் அணிவித்து திருக்கல்யாணம் நடந்தது.
இந்த திருமணத்தை சிவகிருஷ்ண மூர்த்தி, சிவ ரவிச்சந்திரன் ஆகியோர் நடத்தி வைத்தனர்.
நிகழ்ச்சியில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து அன்னதானமும் வழங்கப்பட்டது.