செய்திகள்

10-ம் வகுப்பு தேர்வு முடிவுக்கு காத்திருந்தவரின் வாழ்க்கை துப்பாக்கி சூட்டில் முடிந்துபோன சோகம்

Published On 2018-05-23 10:13 GMT   |   Update On 2018-05-23 10:13 GMT
ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில் தூத்துக்குடியைச் சேர்ந்த பள்ளி மாணவி பலியானார்.
தூத்துக்குடி:

துப்பாக்கி சூட்டில் பலியான தூத்துக்குடியைச் சேர்ந்த வெனிஸ்டா (வயது 17) பள்ளி மாணவியாவார்.

இவர் தற்போது, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதி விட்டு இன்று வெளியாகும் தேர்வு முடிவுக்காக காத்து இருந்தார். மாணவி இறந்த தகவல் அறிந்ததும் அவரது பெற்றோர், உறவினர்கள் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் திரண்டனர்.

அவர்கள் வெனிஸ்டா உடலை பார்த்து கதறி அழுதனர். மாணவி வெனிஸ்டாவின் வாயில் குண்டு பாய்ந்துள்ளது.

இதுபற்றி மாணவியின் உறவினர்கள் கூறுகையில், “வெனிஸ்டா சிறுவயதில் இருந்தே நன்றாக படிப்பவர். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் நல்ல மதிப்பெண் எடுப்பேன் என்று வீட்டில் உள்ளவர்களிடம் தெரிவித்து வந்தார்.

ஆனால் துரதிஷ்டவசமாக அவர் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்து பலியாகிவிட்டார்” என்றனர்.
Tags:    

Similar News