செய்திகள் (Tamil News)

சப்-இன்ஸ்பெக்டரை கத்தியால் குத்திய வாலிபர் கைது

Published On 2018-07-14 11:05 GMT   |   Update On 2018-07-14 11:05 GMT
சப்-இன்ஸ்பெக்டரை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராயபுரம்:

ராயபுரம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் செல்வகுமார். நேற்று இரவு இவர் மற்றும் போலீஸ்காரர்கள் சரவணன், செந்தில் ஆகியோர் ராயபுரம் மேம்பாலம் சிக்னல் அருகே சிமெண்டரி ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது 2 பேர் குடிபோதையில் தகராறு செய்து கொண்டிருந்தனர். அதில் ஒருவர் மற்றொருவரை கத்தியால் குத்தினார்.

இதை பார்த்த சப்- இன்ஸ்பெக்டர் செல்வகுமார் மற்றும் போலீசார் அங்கு தகராறு செய்த வாலிபரை மடக்கி பிடித்தனர். அப்போது ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமாரையும் கத்தியால் குத்தினார்.

இதில் அவருக்கு கையில் காயம் ஏற்பட்டது. உடனே அந்த வாலிபரை சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் மடக்கி பிடித்தனர்.

காயம் அடைந்த சப்- இன்ஸ்பெக்டர் செல்வகுமார், கத்திக்குத்து பட்ட மற்றொரு வாலிபரையும் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

விசாரணையில் பிடிபட்ட வாலிபர் பழைய வண்ணாரப்பேட்டை தயாளன் என்பதும், அவர் மீது வழிப்பறி, வீடு புகுந்து கொள்ளையடித்தது உள்பட பல வழக்குகள் இருப்பது தெரிய வந்தது.

அவர் கத்தியால் குத்திய வாலிபர் பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த கார்த்திக் என்று தெரிந்தது. இதுகுறித்து ராயபுரம் போலீசார் தயாளனை கைது செய்து விசாரித்தனர்.

Tags:    

Similar News