ஒகேனக்கல்லில் பரிசலில் சென்று பென்னாகரம் எம்.எல்.ஏ. ஆய்வு
ஒகேனக்கல்:
கர்நாடகா மாநில அணைகளில் திறந்து விடப்பட்ட தண்ணீரால் ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகமாக உள்ளது. இதனால் பரிசல் இயக்க கடந்த 20 நாட்களாக தடைவிதிக்கப்பட்டு உள்ளது.
பரிசல் இயக்க முடியாததால் பரிசல் ஓட்டிகள் வேலையில்லாமல் திண்டாடி வருகின்றனர். மாற்று வழியான கோத்திக்கல் பாறை வழியாக பரிசல் இயக்கலாம் என்று பரிசல் ஓட்டிகள் கோரிக்கை விடுத்து கடந்த மாதம் முதல் அவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
நீர்வரத்து அதிகமாக இருக்கும் காலங்களில் பரிசல் இயக்கினால் ஆபத்துக்கள் ஏற்படும். எனவே, பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
பரிசல் ஓட்டிகளின் நீண்ட கால கோரிக்கையான ஒகேனக்கலில் நீர்வரத்து அதிகமாக இருக்கும் காலங்களில் கோத்திக்கல் பாறை வழியாக பரிசல் இயக்கப்படுமா? என்று பென்னாகரம் எம்.எல்.ஏ. இன்பசேகரன் நேற்று மாலை ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர் கூட்டாறு பகுதியில் உள்ள மீன்மார்க்கெட்டு அருகே காவிரி ஆற்றங் கரையோரத்தில் இருந்து கோத்திக்கல் பாறை வழியாக பரிசலில் சென்று ஆய்வு செய்தார். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. #Hogenakkal