ஏ.ஆர்.ரகுமான் நிகழ்ச்சியில் குளறுபடி: துணை கமிஷனர் தீபா சத்யன் அதிரடி மாற்றம்
- சென்னை கிழக்கு இணை கமிஷனராக இருந்த திஷா மிட்டல் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
- அமலாக்கப் பிரிவு துணை கமிஷனர் ஆதர்ஸ் பச்சேரா, நெல்லை துணை கமிஷனராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை:
சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியின்போது கடும் குளறுபடி ஏற்பட்டு போக்குவரத்து நெரிசலில் வாகனங்கள் சிக்கி தவித்தன.
இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்த டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் விசாரணை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நிகழ்ச்சி நடைபெற்ற போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பள்ளிக்கரணை துணை கமிஷனரான தீபா சத்யன் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சென்னை கிழக்கு இணை கமிஷனராக இருந்த திஷா மிட்டலும் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். வள்ளுவர் கோட்டத்தில் நடந்த பா.ஜ.க. ஆர்ப்பாட்டத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதை கூறி இவர் மாற்றப்பட்டுள்ளார்.
அமலாக்கப் பிரிவு துணை கமிஷனர் ஆதர்ஸ் பச்சேரா, நெல்லை துணை கமிஷனராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.