தமிழ்நாடு (Tamil Nadu)

பவானிசாகர் அணைக்கு 639 கன அடியாக நீர்வரத்து குறைந்தது

Published On 2024-09-09 06:53 GMT   |   Update On 2024-09-09 06:53 GMT
  • இன்று காலை பவானி சாகர் அணைக்கு வினாடிக்கு 639 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
  • கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 2 ஆயிரத்து 300 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

ஈரோடு:

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணையில் இருந்து தொடர்ந்து நீர்வரத்தை விட பாசனத்திற்காக அதிக அளவு நீர் திறக்கப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் சரிய தொடங்கியுள்ளது.

இன்று காலை பவானி சாகர் அணைக்கு வினாடிக்கு 639 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இன்று காலை நிலவரப்படி பவானி சாகர் அணை நீர்மட்டம் 95.25 அடியாக உள்ளது. குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடியும், தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 750 கன அடியும், காளிங்கராயன் வாய்க்கால் பாசனத்திற்கு 100 கன அடியும் திறக்கப்பட்டுள்ளது.

இதைப்போல் கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 2 ஆயிரத்து 300 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. மொத்தம் 3 ஆயிரத்து 250 கன அடி தண்ணீர் பவானி சாகர் அணையில் இருந்து திறந்து விடப்பட்டு வருகிறது. இதேபோல் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதன் காரணமாக குண்டேரிப்பள்ளம், வரட்டுபள்ளம் அணை தனது முழு கொள்ளளவை நெருங்கி வருகிறது.

41.75 அடி கொள்ளளவு கொண்ட குண்டேரிபள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 40.38 அடியாக உள்ளது. இதேபோல் 33.47 அடி கொள்ளளவு கொண்ட வரட்டுபள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 33.17 அடியாக உள்ளது.

Tags:    

Similar News