தமிழ்நாடு (Tamil Nadu)

பா.ஜ.க. மாநில நிர்வாகி குண்டர் சட்டத்தில் கைது

Published On 2024-07-05 03:27 GMT   |   Update On 2024-07-05 09:35 GMT
  • ரவுடி சீர்காழி சத்யாவை காலில் சுட்டு போலீசார் கைது செய்தனர்.
  • அலெக்சிஸ் சுதாகர் மீது மேலும் 3 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

சென்னை:

சீர்காழியை சேர்ந்த ரவுடி சத்யா, மாமல்லபுரம் அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீசாரால் சுற்றி வளைத்து கைது செய்யப்பட்டார்.

மாமல்லபுரம் பகுதியில் பண்ணை வீடு ஒன்றில் நடைபெற்ற வக்கீல் அலெக்ஸ் சுதாகரின் பிறந்த நாள் விழாவுக்காக சீர்காழியில் இருந்து வந்திருந்தபோதுதான் சத்யா போலீசில் சிக்கினார். விலை உயர்ந்த சொகுசு காரில் சென்றபோது போலீசார் மடக்கி பிடித்ததால் தப்பி ஓடிய சீர்காழி சத்யா மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினார்கள்.

இதில் அவரது இடது காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. பிடிக்க முயன்றபோது போலீசாரை தாக்கி விட்டு தப்ப முயன்றதால் துப்பாக்கியால் சுட நேரிட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

சீர்காழி சத்யா வைத்திருந்த துப்பாக்கி கள்ளத்துப்பாக்கி என்பது மாமல்லபுரம் போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது.

இந்த துப்பாக்கியை பா.ஜனதா பிரமுகரான வக்கீல் அலெக்ஸ் சுதாகர் வாங்கி கொடுத்திருப்பதாக குற்றம் சாட்டிய போலீசார் அவரையும் கைது செய்திருந்தனர். அலெக்ஸ் சுதாகரிடம் இருந்து 5 தோட்டாக்கள் மற்றும் இன்னொரு கள்ளத்துப்பாக்கி ஆகியவையும் பிடிபட்டது. இது தொடர்பான வழக்கில் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் அலெக்ஸ் சுதாகரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய செங்கல்பட்டு போலீஸ் சூப்பிரண்டு சாய்பிரனித் பரிந்துரை செய்தார். இதனை ஏற்று மாவட்ட கலெக்டர் அருண்குமார் அலெக்ஸ் சுதாகரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து மாமல்லபுரம் போலீசார் அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். இது தொடர்பான உத்தரவு சிறையில் உள்ள அவரிடம் வழங்கப்பட உள்ளது.

ரவுடி சத்யா பிடிபட்ட போது திருவாரூர் மாரி முத்து, தஞ்சை பால்பாண்டி ஆகிய 2 பேர் தப்பி ஓடி விட்டனர். அவர்களை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு உள்ளார்கள்.

Tags:    

Similar News