தமிழ்நாடு (Tamil Nadu)

திமுக பிரமுகர் வீடு உள்பட 2 இடங்களில் நாட்டு வெடிகுண்டு வீச்சு

Published On 2024-08-16 03:11 GMT   |   Update On 2024-08-16 03:11 GMT
  • முகமூடி அணிந்து கொண்டு 2 மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் ஜெகன் வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டை வீசினர்.
  • சம்பவ இடத்துக்கு கிராம மக்கள் ஓடி வருவதை கண்ட அந்த கும்பல் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்.

சோழவரம்:

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள சோழவரம் கிராமத்தில் கோட்டைமேடு காலனி கென்னடி தெருவில் வசித்து வருபவர் ஜெகன் (வயது 38). இவர் சோழவரம் தெற்கு ஒன்றிய திமுக இளைஞரணி துணை அமைப்பாளராக உள்ளார். இவரது மனைவி அபிஷாபிரியாவர்ஷினி (33) சோழவரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவராக இருந்து வருகிறார்.

நேற்று மாலை முகமூடி அணிந்து கொண்டு 2 மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் ஜெகன் வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டை வீசினர். இதில் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சிதறியது. வீட்டில் இருந்த ஜெகன் வெளியே வருவதற்குள் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. இதுகுறித்து சோழவரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

இதற்கிடையே தப்பி சென்ற அதே மர்ம கும்பல் சோழவரம் நெடுஞ்சாலையில் உள்ள லாரி நிறுத்தும் இடத்திற்கு சென்று அங்கு வேலை செய்து வரும் சோழவரம் கோட்டைமேடு காலனியை சேர்ந்த லாரி டிரைவர் சிவா (30) என்பவரிடம் சென்று மாமூல் கேட்டு மிரட்டியதாக தெரிகிறது. அவர் கொடுக்க மறுத்ததால் அவரை கத்தியால் கையில் வெட்டி விட்டு லாரி நிறுத்தும் இடத்தில் நாட்டு வெடிகுண்டு வீசிவிட்டு தப்பி சென்றனர்.

தொடர்ந்து ஆங்காடு ஊராட்சியில் உள்ள சிறுணியம் காலனி கெங்கையம்மன் கோவில் தெருவில் வசிக்கும் வியாபாரி சரண்ராஜ் (38) என்பவர் கார் கண்ணாடிகளை உடைத்து கலாட்டா செய்தனர். சம்பவ இடத்துக்கு கிராம மக்கள் ஓடி வருவதை கண்ட அந்த கும்பல் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்.

இச்சம்பவங்கள் குறித்து பாதிக்கப்பட்ட 3 பேரும் சோழவரம் போலீசில் தனித்தனியாக புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டு வீசி அரசியல் பிரமுகர், வியாபாரிகளை அச்சுறுத்தி மாமூல் பெறும் நோக்கத்தில் இச்செயலில் ஈடுபட்டார்களா? அல்லது வேறு ஏதும் காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் சோழவரம், சிறுணியம் ஆகிய பகுதிகளில் பெரும் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News