தமிழ்நாடு

நாட்டில் அமைதி, அன்புடன் சமத்துவ உலகம் பிறந்திட வேண்டும்- முதலமைச்சர் கிறிஸ்துமஸ் வாழ்த்து

Published On 2022-12-24 05:44 GMT   |   Update On 2022-12-24 05:44 GMT
  • தம்மைச் சிலுவையில் அறைந்தவர்களையும் மன்னிக்கக்கோரிய உயர்ந்த உள்ளம் கொண்டு விளங்கியவர் இயேசுபிரான்.
  • அமைதியும் அன்பும் நிலைத்த சமத்துவ உலகம் பிறந்திட இயேசுவின் நன்னெறிகள் நமக்கு வழி காட்டட்டும்.

சென்னை:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

சமத்துவம், சகோதரத்துவம், ஈகை ஆகிய மனிதநேயப் பண்புகளின் விழாவாக அன்பைப் பரிமாறி, ஏழை எளியோருக்கு உதவும் திருநாளாக அமைந்துள்ள கிறிஸ்துமஸ் பெருவிழாவை மகிழ்ச்சியோடும் ஏற்றத்தோடும் கொண்டாடும் அனைவருக்கும் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தம்மைச் சிலுவையில் அறைந்தவர்களையும் மன்னிக்கக்கோரிய உயர்ந்த உள்ளம் கொண்டு விளங்கியவர் இயேசுபிரான். "உன்னிடத்தில் நீ அன்பு கூறுவது போலப் பிறரிடத்திலும் அன்பு கூறுவாயாக என்றும், "மன்னியுங்கள், நீங்கள் மன்னிக்கப்படுவீர்கள்" என்றும், "அமைதிக்காக உழைப்பவர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்" என்றும் ஈராயிரம் ஆண்டுகளுக்கும் முன்பே இயேசு அருளிய போதனைகள் எக்காலத்துக்கும் எந்நிலத்துக்கும் பொருந்தும்.

இத்தகைய உயரிய நெறிகளைப் பின்பற்றித் தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் கிறித்துவத் தோழர்களின் நலனுக்காக எண்ணற்ற நலத்திட்டங்களை நமது அரசு தொடர்ந்து ஆற்றி வருகிறது. 1989-ம் ஆண்டு சிறுபான்மையினர் நல ஆணையத்தையும், 1999-ம் ஆண்டு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தையும், 2007-ம் ஆண்டு சிறுபான்மையினர் நல இயக்கத்தையும் முத்தமிழறிஞர் கலைஞர் அமைத்தார். அவரது அடியொற்றி நடக்கும் நமது திராவிட மாடல் அரசும் கரூர், மதுரை, தேனி ஆகிய மூன்று மாவட்டங்களில் ஒரு கிறித்துவ உதவி சங்கம் கூடுதலாகத் துவங்கிட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஜெருசலேமுக்கு புனிதப் பயணம் செல்வதற்கு அருட் சகோதரிகள், கன்னியாஸ்திரிகளுக்கு வழங்கப்படும் மானியம் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. அனைத்துத் தரப்பினரையும் அரவணைக்கும் நமது திராவிட மாடல் அரசானது கிறிஸ்தவ மக்களின் சமூக-பொருளாதார-கல்வி நிலையை உயர்த்துவதிலும் அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதிலும் உறுதியோடு உள்ளது.

அமைதியும் அன்பும் நிலைத்த சமத்துவ உலகம் பிறந்திட இயேசுவின் நன்னெறிகள் நமக்கு வழி காட்டட்டும்.

இவ்வாறு அவர் வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News