தமிழ்நாடு (Tamil Nadu)

அதிமுக-பாஜக கூட்டணியில் மோதலா.. யார் சொன்னது? ஜெயக்குமார் விளக்கம்

Published On 2023-03-09 08:38 GMT   |   Update On 2023-03-09 08:38 GMT
  • தமிழ்நாட்டில் மக்கள் வெறுக்கத்தக்க ஒரு ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது என ஜெயக்குமார் விமர்சனம்
  • தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் அதிமுக தலைமையிலான கூட்டணி என விளக்கம்

சென்னை:

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. பாராளுமன்றத் தேர்தல் பணிகள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. தேர்தலுக்கு பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை தொடங்க மாவட்ட செயலாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும் அதிமுக கட்டமைப்பை வலுப்படுத்த நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தினார்.

இந்த நிலையில் இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-

மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி குறித்தும் பாராளுமன்ற தேர்தல் வர இருப்பதால் கட்சி பணிகள் குறித்தும் விவாதித்தோம். மக்களை சந்தித்து பணியாற்ற வேண்டியது குறித்து ஆலோசித்தோம். தமிழ்நாட்டில் மக்கள் வெறுக்கத்தக்க ஒரு ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது. இந்த ஆட்சியின் மீது கடுமையான அதிருப்தி உருவாகி உள்ளது. எனவே இந்த ஆட்சியின் அவலங்களையும், எங்கள் முந்தைய ஆட்சியின் சாதனைகளையும் மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்ல வேண்டும் என்பது குறித்து பேசப்பட்டது.

பொதுச்செயலாளர் தேர்தல் குறித்து இன்றைய மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கவில்லை. அதுபற்றி உரிய நேரத்தில் அறிவிப்போம்.

பாஜக உடனான கூட்டணி குறித்து அதிமுக எந்த சர்ச்சையான கருத்தும் கூறவில்லை. எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தை எரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதுபோன்ற செயல்களை ஊக்கப்படுத்தாமல் பாஜக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதிமுக, பாஜக இடையே எந்த மோதல் போக்கும் இல்லை. மோதல் இருப்பதாக யார் சொன்னது? அப்படி எதுவும் இல்லை. ஏதோ ஐடி பிரிவில் உள்ள சிலர், பக்குவப்படாத சிலர் சில கருத்துக்களை சொன்னார்கள். அதற்கு நாங்களும் பதில் கருத்து கூறி விட்டோம். அதனால் கூட்டணி தொடர்கிறது. அகில இந்திய அளவில் தேசிய ஜனநாயக கூட்டணி, தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் அதிமுக தலைமையிலான கூட்டணி. இந்த கூட்டணி தொடரும்.

அண்ணாமலை, தலைவர்கள் பற்றி கூறுவது அவருடைய தனிப்பட்ட கருத்து. எங்களுடைய தலைவருக்கு நிகரானவர் இனி தமிழ்நாட்டில் பிறக்கப் போவது கிடையாது. ஓ.பன்னீர்செல்வம் கட்சி நடத்தவில்லை, கடை நடத்தி வருகிறார். ஓ.பன்னீர்செல்வத்திடம் இருந்து யார் வந்தாலும் தாயுள்ளத்தோடு வரவேற்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News