தமிழ்நாடு

கார் வெடிப்பு வழக்கு ஆவணங்கள் என்.ஐ.ஏ.விடம் ஒப்படைப்பு

Published On 2022-10-29 08:37 GMT   |   Update On 2022-10-29 08:37 GMT
  • கைதானவர்கள் வீடுகளிலும் 2 முறை சோதனை நடத்தி பல்வேறு முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றி உள்ளனர்.
  • சாரணையின் அறிக்கைகள், கைப்பற்றிய பொருட்கள் உள்ளிட்டவற்றை என்.ஐ.ஏ.விடம் வழங்கும் பணி தொடங்கி விட்டது.

கோவை:

கோவை கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோவில் முன்பு நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த ஜமேஷா முபின் உயிரிழந்தான்.

இந்த சம்பவம் தொடர்பாக மாநகர போலீசார் 7 தனிப்படை அமைத்து, இதில் தொடர்புடைய 6 பேரை கைது செய்தனர்.

கைதானவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் கோவையில் பயங்கர சதி வேலைகளுக்கு திட்டம் தீட்டியது தெரியவந்தது. மேலும் பல அதிர்ச்சி தகவல்களும் கிடைத்தன.

இந்த வழக்கில் கடந்த 7 நாட்களாக போலீசார் புலன் விசாரணை நடத்தி வந்தனர். சம்பவம் நடந்ததும் அந்த இடத்திற்கு சென்ற போலீசார் காரில் இருந்து சிலிண்டர்கள், ஆணி, கோலி குண்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் கைதானவர்கள் வீடுகளிலும் 2 முறை சோதனை நடத்தி பல்வேறு முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றி உள்ளனர்.

இந்த நிலையில் இந்த வழக்கினை என்.ஐ.ஏ.வுக்கு தமிழக அரசு மாற்றியது. என்.ஐ.ஏ.வும் இந்த வழக்கினை விசாரணைக்கு எடுத்து கொண்டது.

தென்மண்டலங்களுக்கான டி.ஐ.ஜி. வந்தனா, போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஜித் தலைமையிலான 8 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் கோவையிலேயே முகாமிட்டு, தமிழக போலீசாருடன் இணைந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டதால் இதுவரை விசாரணை நடத்தி வந்த கோவை மாநகர போலீசார் இன்றுடன் தங்களது விசாரணையை நிறைவு செய்தனர். இனி இந்த வழக்கினை என்.ஐ.ஏ. போலீசார் விசாரிக்க உள்ளனர்.

வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்கள், கோப்புகள், வீடியோ காட்சிகள், பறிமுதல் செய்த பொருட்கள் அனைத்தையும் கோவை மாநகர போலீசார் என்.ஐ.ஏ.விடம் ஒப்படைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறுகையில், கோவை கார் வெடிப்பு வழக்கு சம்பந்தமாக 6 பேரை கைது செய்துள்ளோம். வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டு விட்டது. இனி இந்த வழக்கை அவர்கள் விசாரிப்பார்கள். இதுவரை நாங்கள் மேற்கொண்ட விசாரணையின் அறிக்கைகள், கைப்பற்றிய பொருட்கள் உள்ளிட்டவற்றை என்.ஐ.ஏ.விடம் வழங்கும் பணி தொடங்கி விட்டது. ஓரிரு நாளில் அனைத்தையும் அவர்களிடம் ஒப்படைத்து விடுவோம் என்றார்.

Tags:    

Similar News