தமிழ்நாடு (Tamil Nadu)

தீ விபத்து ஏற்பட்ட பெண்கள் தங்கும் விடுதி கட்டிடத்தை இடிக்க முடிவு

Published On 2024-09-12 07:11 GMT   |   Update On 2024-09-12 07:11 GMT
  • பெண்கள் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் மூச்சுத்திணறி ஆசிரியை உள்பட 2 பேர் பலியானார்கள்.
  • விபத்து நடந்த இடத்தை கலெக்டர் சங்கீதா ஆய்வு மேற்கொண்டார்.

மதுரை:

மதுரை மாவட்டம் கட்ராபாளையம் பகுதியில் இயங்கி வரும் பெண்கள் விடுதியில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் மூச்சுத்திணறி ஆசிரியை உள்பட 2 பேர் பலியானார்கள்.

விபத்து நடந்த இடத்தை கலெக்டர் சங்கீதா ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறுகையில், மதுரையில் மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி உள்ள பழமை வாய்ந்த கட்டிடங்களை இடிப்பதற்கு மாநகராட்சி சார்பில் முறையாக நோட்டீஸ் வழங்கியும் அவர்கள் இடிக்காமல் இருக்கிறார்கள். நீதிமன்றத்தையும் சில பேர் அணுகி உள்ளனர். இடிக்காமல் இருக்கும் பழமை வாய்ந்த கட்டிடங்கள் ஆலோசித்து 'சீல்' வைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

அதேபோல் மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமாரும், பார்வையிட்டு ஆய்வு செய்தார். முறையான மாநகராட்சி அனுமதி, சுகாதாரத் துறை அனுமதி, தீயணைப்புத்துறையின் தடையில்லா சான்று, காவல்துறையின் அனுமதி என்று எந்தவிதமான அனுமதியும் பெறாமல் இந்த விடுதி செயல்பட்டு வந்துள்ளது. விரிவான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

இந்நிலையில் தீ விபத்து ஏற்பட்டு 2 பெண்கள் பலியான நிலையில் பெண்கள் தங்கும் விடுதியை இடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

விடுதி செயல்பட்டு வந்த கட்டிட உரிமையாளருக்கு மீண்டும் ஒரு நோட்டீஸ் வழங்க உள்ளதாகவும் மதுரை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News