தமிழ்நாடு (Tamil Nadu)

சென்னையில் 1½ கோடி கறிக்கோழிகள்- தீபாவளி விற்பனைக்கு குவிக்கப்படுகிறது

Published On 2022-10-20 10:38 GMT   |   Update On 2022-10-20 10:38 GMT
  • தீபாவளி விற்பனைக்காக 10 முதல் 15 சதவீதம் வரை கறிக்கோழி உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது.
  • கறிக்கோழியின் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதால் தற்போது விலை உயர்ந்துள்ளது.

சென்னை:

தீபாவளி பண்டிகைக்காக ஆடு, கோழிகள் விற்பனைக்காக குவிக்கப்படுகிறது. சென்னையில் 20 ஆயிரம் ஆடுகள் 2 நாட்களும் வெட்டுவதற்கு தயாராக உள்ளன. கறிக்கோழிகளும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. தீபாவளிக்கு 3 கோடி கிலோ கறிக்கோழி விற்பனையாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. சென்னை மாநகரப் பகுதி முழுவதும் கறிக்கோழி விற்பனை தடையில்லாமல் நடைபெற அனைத்து முன் ஏற்பாடுகளையும் வியாபாரிகள் இப்போதே செய்து வருகின்றனர்.

இதுகுறித்து சென்னை கோழி மொத்த வியாபாரிகள் சங்க பொதுச் செயலாளர் பா.ஞானசெல்வம் கூறியதாவது:-

சென்னை மாநகரம் முழுவதும் வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் ஒரு கோடி முதல் 1½ கோடி கிலோ கறிக்கோழி விற்பனை செய்யப்படும். வார நாட்களில் (திங்கள் முதல் சனி வரை) 1 கோடி கிலோ கோழிக்கறி விற்பனையாகும்.

தீபாவளி விற்பனைக்காக 10 முதல் 15 சதவீதம் வரை கறிக்கோழி உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது. இது இந்த ஆண்டு போதுமானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

புரட்டாசி முடிந்து ஒரு வாரத்தில் தீபாவளி பண்டிகை வருகிறது. விரதம் இருந்தவர்கள் வருகிற ஞாயிற்றுக்கிழமையில் அசைவ உணவு சாப்பிடுவார்கள். அதனால் ஞாயிற்றுக்கிழமை விற்பனை அமோகமாக இருக்க வாய்ப்பு உள்ளது.

20 சதவீதம் கூடுதலாக கறிக்கோழி விற்பனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். அதனால் 2 நாட்களுக்கும் சேர்த்து சென்னைக்கு 1½ கோடி கறிக்கோழிகளை குவிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. 3 கோடி கிலோ கறிக்கோழி விற்பனையாகும் என்று கருதுகிறோம். அதனை கணக்கிட்டு கறிக்கோழி கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது.

கறிக்கோழியின் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதால் தற்போது விலை உயர்ந்து உள்ளது. கிலோ ரூ.240 முதல் ரூ.260 வரை விற்கப்படுகிறது. தீபாவளிக்கு மேலும் ரூ.20 வரை கூடலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கடை எஸ்.ஆர்.தேவர் சிக்கன் கடை உரி மையாளர் ராமநாதன் கூறுகையில், புரட்டாசி மாதத்தில் கிலோ ரூ.180 முதல் ரூ.200 வரை விற்கப்பட்டது. புரட்டாசி முடிந்த மறுநாளே கிலோவிற்கு ரூ.40 கூடி தற்போது ரூ.240க்கு விற்கப்படுகிறது.

பண்டிகை நாளில் இது மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றார்.

Tags:    

Similar News