தமிழ்நாடு (Tamil Nadu)

தருமபுரி மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது

Published On 2024-05-21 06:47 GMT   |   Update On 2024-05-21 06:47 GMT
  • தருமபுரி மாவட்டத்தில் 3 நாட்களில் 131.6 மில்லி மீட்டர் மழை பதிவானது.
  • பென்னாகரம் ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதியில் நடுநிசிவரை கனமழை கொட்டி தீர்த்தது.

தருமபுரி:

தருமபுரி மாவட்டத்தில், நேற்று மாலை முதல் இரவு நடுநிசி வரை பரவலாக மழை பெய்ததால், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

கோடை காலம் தொடங்கிய நிலையில், கடந்த சில நாட்களாக தருமபுரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில், கோடை மழை பெய்து வருகிறது. இந்தாண்டு வெப்பத்தின் அளவு வரலாறு காணாத அளவில் இருந்தது. இந்த நிலையில் கத்திரி வெயில் எனும் அக்கினி வெயில் தொடங்கிய 4ம் தேதி முதல் கோடை மழை ஆரம்பித்து பெய்து வந்தது. இதனை தொடர்ந்து மே,17, 18, 19 ஆகிய மூன்று நாட்கள் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட, 22 மாவட்டங்களுக்கு கனமழை பெய்யும் என, வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன் அடிப்படையில் தருமபுரி மாவட்டத்தில் 3 நாட்களில் 131.6 மில்லி மீட்டர் மழை பதிவானது.

இதனை தொடர்ந்து நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. நேற்று பிற்பகல் முதல் தருமபுரி, பாலக்கோடு, மாரண்டஹள்ளி, மொரப்பூர், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்தது. பென்னாகரம் ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதியில் நடுநிசிவரை கனமழை கொட்டி தீர்த்தது.

தருமபுரி மாவட்டத்தில் பெய்த மழைஅளவு மில்லிமீட்டரில் வருமாறு:-

தருமபுரி-8, பாலக்கோடு-29.4, மாரண்டஅள்ளி-3, பென்னாகரம்-48, ஒகேனக்கல்-84, அரூர்-18.4, பாப்பிரெட்டிப்பட்டி-41, மொரப்பூர்-5 என மாவட்டத்தில் நேற்று மொத்தம் 236.8 மி.மீ மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக ஒகேனக்கல்லில் 84 மி.மீ பதிவாகியுள்ளது.

Tags:    

Similar News