வெறுப்பு உளநிலை கொண்ட ஆளுநரின் 'தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாடு' - திருமாவளவன் தாக்கு
- "தெக்கணமும் அதன் சிறந்த திராவிடநல் திருநாடும் " என்னும் வரி திட்டமிட்டே தவிர்க்கப்பட்டுள்ளது.
- ஆளுநரின் 'வெறுப்பு உளநிலையை' உறுதிபடுத்துகிறது.
சென்னை டிடி தமிழ் தொலைக்காட்சி அலுவலகத்தில் நேற்று நடந்த இந்தி மாத விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றிருந்தனர். விழாவின் தொடக்கத்தில் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில் 'தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்' என்ற வரி இடம்பெறாமல் விடுபட்டது சர்ச்சையை ஏற்படுதியது. இதுதொடர்பாக தனது முதல்வர் ஸ்டாலின் உட்பட அனைத்து அரசியல் தலைவர்களும் தங்களின் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
அந்த வகையில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள கண்டனப் பதிவில்,
டி.டி.தமிழ் தொலைக்காட்சி அலுவலகத்தில் நடைபெற்ற 'இந்தி மாத' கொண்டாட்ட நிறைவு விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி அவர்கள் பங்கேற்றுள்ளார்.
அந்நிகழ்வில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடப்பட்ட போது, "தெக்கணமும் அதன் சிறந்த திராவிடநல் திருநாடும் " என்னும் வரி திட்டமிட்டே தவிர்க்கப்பட்டுள்ளது.
இது தமிழ்நாட்டு மக்களுக்கு எதிரான ஆளுநரின் 'வெறுப்பு உளநிலையை' உறுதிபடுத்துகிறது. ஆளுநரின் இத்தகைய போக்கு கண்டனத்துக்குரியது.
ஏற்கனவே, பொதிகை என்னும் பெயரை நீக்கியது, தொலைக்காட்சியின் இலச்சினையை காவி நிறத்துக்கு மாற்றியது என தொடர்ந்து தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துவரும் பாஜக அரசையும்; ஆளுநர் ஆர்.என். ரவி அவர்களையும் விசிக சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.