தாயுடன் என்ஜினீயர் பலி: கார் விபத்தில் சிக்கிய தந்தைக்கு தீவிர சிகிச்சை
- விபத்தில் ரேணுகா தேவி மற்றும் செல்லத்துரை ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயரிழந்தனர்.
- கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கயத்தாறு:
சென்னை அடையாறு கிரசன்ட் பார்க் தெருவை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன் (வயது 62). இவரது மனைவி ரேணுகாதேவி (57). இவர்களுடைய மகன் செல்லத்துரை (32). இவர் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் நவநீத கிருஷ்ணன் தனது மனைவி, மகனுடன் நெல்லை மாவட்டம் களக்காட்டில் உள்ள ஒருவரின் திருமண நிகழ்ச்சிக்கு நேற்று முன்தினம் காரில் வந்தார். திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு மீண்டும் 3 பேரும் நேற்று காரில் சென்னைக்கு புறப்பட்டனர். காரை செல்லத்துரை ஓட்டினார்.
மதியம் கயத்தாறு அருகே நாற்கர சாலையில் உள்ள பாலத்தில் சென்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் பாலத்தின் தடுப்புச்சுவரில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் ரேணுகா தேவி மற்றும் செல்லத்துரை ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயரிழந்தனர்.
நவநீதகிருஷ்ணன் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இந்த விபத்தில் அவருக்கு வலது காலும், இடது கையும் முறிந்தது. அவரை போலீசார் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கிருந்து தனியார் ஆஸ்பத்திரிக்கு அவர் மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து பற்றி கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.