தமிழ்நாடு (Tamil Nadu)

கலெக்டர் பெயரில் போலி முகநூல் கணக்கு- சைபர் கிரைம் போலீசார் விசாரணை

Published On 2024-09-24 04:15 GMT   |   Update On 2024-09-24 04:15 GMT
  • வாட்ஸ்-அப், முகநூல் உள்ளிட்ட சமூகவலைத்தளத்தை பயன்படுத்தி ஆன்லைன் மோசடி அரங்கேறி வருகிறது.
  • பொதுமக்கள் உஷாராக இருந்து செயல்பட விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை:

இன்றைய நவீல உலகில் இணையதள பயன்பாடு அதிகமாக உள்ளது. சமூகவலைத்தளங்களை பார்வையிடுதல், அதில் பதிவேற்றம் உள்ளிட்ட நடவடிக்கைகளில் பலரும் ஈடுபடுகின்றனர். இதற்கிடையில் வாட்ஸ்-அப், முகநூல் உள்ளிட்ட சமூகவலைத்தளத்தை பயன்படுத்தி ஆன்லைன் மோசடியும் அரங்கேறி வருகிறது.

இந்த சூழலில் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் மு.அருணா பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கப்பட்டிருந்தது. அந்த முகநூல் பக்கத்தில் இருந்த தகவல்கள் சந்தேகத்திற்கு இடமான வகையில் காணப்பட்டது. இதனால் பலரும் சந்தேகமடைந்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இதை அறிந்த கலெக்டர் மு.அருணா இதுபற்றி சைபர் கிரைம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதை தொடர்ந்து சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கலெக்டர் அருணாவின் பெயரில் போலி முகநூல் கணக்கை தொடங்கியது ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கும்பல் என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து அந்த போலி முகநூல் கணக்கை போலீசார் முடக்கினர்.

சமூக வலைதளங்களில் உலாவரும் இதுபோன்ற மோசடிகளை தடுக்க சைபர் கிரைம் போலீசாரும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். பொதுமக்கள் சிலரது பெயரில் போலி கணக்குகளை தொடங்கி அதன் மூலம் தற்போது பண மோசடி நடைபெறுவது அதிகரித்து வருகிறது. இதனால் போலி கணக்குகளை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.

உங்கள் நண்பரின் சுய விவரத்தை பயன்படுத்தி போலி சமூக ஊடக கணக்கை தொடங்கி உங்களின் தனிப்பட்ட தகவலை பெறுவதற்கும் அல்லது அவசர நிலையை காரணம் காட்டி பணம் கேட்கவும் நட்பு கோரிக்கை விடுப்பார்கள். இதனால் பொதுமக்கள் உஷாராக இருந்து செயல்பட விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

மேலும் இதுபோன்ற மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் சைபர் கிரைம் போலீசில் 1930 என்ற உதவிமைய தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம். மேலும் https://cybercrime.gov.in-ல் புகார் அளிக்கலாம் என போலீசார் தரப்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

Tags:    

Similar News