தமிழ்நாடு
null

ஹிண்டன்பர்க் விவகாரம்: அண்ணாமலையின் பேச்சை பிரதமர் மோடி கேட்க வேண்டும்- மாணிக்கம் தாகூர்

Published On 2024-08-11 12:53 GMT   |   Update On 2024-08-11 12:54 GMT
  • அதானியின் வெளிநாட்டு நிறுவனங்களில் மாதபி புரி புச் பங்குகளை வாங்கியதாக ஹிண்டன்பர்க் புகார்
  • செபி தலைவர் மீதான குற்றச்சாட்டுகளை அரசு விசாரிக்க வேண்டும் என அண்ணாமலை கோரிக்கை

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல முதலீட்டு ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பர்க், கடந்த ஆண்டு இந்தியாவின் அதானி குழுமம் நிதி முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக அறிக்கை வெளியிட்டது. இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதுதொடர்பான தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் அதானி குழும மீதான வழக்கை செபி எனப்படும் இந்திய பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமே விசாரிக்கும் என்று தெரிவித்தது.

இதற்கிடையே ஹிண்டன்பர்க் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில், செபியின் தலைவரான மாதபி புரி புச் மீது ஹிண்டன்பர்க் நிறுவனம் பரபரப்பு குற்றச்சாட்டைத் தெரிவித்துள்ளது.

அதானி குழுமத்தின் பண மோசடி தொடர்பான வெளிநாட்டு நிறுவனங்களில் மாதபி புரி புச் மற்றும் அவரது கணவர் தவால் புச் ஆகியோர் பல்லாயிரக்கணக்கான பங்குகளை வாங்கியிருந்ததாகத் தெரிவித்துள்ளது. எனவே தான் அதானி குழுமத்துக்கு எதிராக எந்த நடவடிக்கையும் செபி எடுக்கவில்லை. அதற்கு பதிலாக செபி எங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது. செபி தலைவர் மீதான இந்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, "செபி தலைவர் மாதபி புச் மீது ஹிண்டன்பர்க் கூறியுள்ள குற்றச்சாட்டுகளை அரசு முழுமையாக விசாரிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை பேசிய இந்த வீடியோவை விருதுநகர் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அவரது பதிவில், "செபி தலைவர் மாதபி புச் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டும் என அண்ணாமலை பேசியதை வரவேற்கிறோம். பிரதமர் மோடி தனது கட்சி மாநிலத் தலைவரின் பேச்சைக் கேட்க வேண்டும், நாடாளுமன்ற கூட்டுக் குழு உடனடியாக இதை விசாரிக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார். 

Tags:    

Similar News