தமிழ்நாடு

கொடைக்கானலுக்கு இஸ்ரேல் நாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளதை முன்னிட்டு வட்டக்கானல் பகுதியில் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

கொடைக்கானலுக்கு இஸ்ரேல் நாட்டு சுற்றுலா பயணிகள் வருகை- சோதனைச்சாவடி அமைத்து கண்காணிப்பு

Published On 2022-11-17 06:01 GMT   |   Update On 2022-11-17 06:01 GMT
  • கொரோனா தொற்று குறைந்துள்ளதால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வரத் தொடங்கியுள்ளனர்.
  • கொடைக்கானல் நகர் பகுதிகளில் வந்து இஸ்ரேல் நாட்டு சுற்றுலா பயணிகள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக பல்வேறு இடங்களுக்கு சென்று வருகின்றனர்.

கொடைக்கானல்:

கொடைக்கானல் வட்டக்கானல் பகுதிக்கு ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதங்களில் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிகமாக வருவது வழக்கம். கடந்த 2 வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ளதால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வரத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக இஸ்ரேல் நாட்டை சேர்ந்த சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நவம்பர், டிசம்பர் மாதங்களில் கொடைக்கானலுக்கு வரும் இவர்கள் இங்கேயே தங்கி இருந்து தங்கள் மத வழிபாட்டில் ஈடுபடுவது வழக்கம்.

மேலும் இவர்களுக்கு போதை காளான், கஞ்சா போன்றவற்றை வழங்குவதற்காக சிலர் உதவி செய்து வருவது கடந்த காலங்களில் நடந்து வந்தது. எனவே அது போன்ற சம்பவங்கள் நடக்காத வகையில் வட்டக்கானல் பகுதி நுழைவுச்சாலையில் கொடைக்கானல் போலீசார் சோதனை சாவடி அமைத்துள்ளனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன் இப்பகுதியில் உள்ள தங்கும் விடுதி மற்றும் கடை உரிமையாளர்களை அழைத்து கொடைக்கானல் டி.எஸ்.பி. சீனிவாசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது இஸ்ரேல் நாட்டினர் இங்கு வரும் சூழலில் அவர்களை கண்காணித்து குற்றச்செயல்களில் ஈடுபட்டாலோ, சந்தேகத்திற்கிடமான நபர்கள் தென்பட்டாலோ அது குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் போலீசார் அவர்களின் நடமாட்டத்தை சோதனை சாவடி அமைத்து கண்காணித்து வருகின்றனர். தற்போது கொடைக்கானல் நகர் பகுதிகளில் வந்து இஸ்ரேல் நாட்டு சுற்றுலா பயணிகள்தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக பல்வேறு இடங்களுக்கு சென்று வருகின்றனர்.

Tags:    

Similar News