பெரியகுளத்தில் நாயின் உடலில் தேசிய கொடியை போர்த்தியவர் கைது
- பெரியகுளம் நேரு நகர் சாந்தகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த காமாட்சி என்பவர் மீது சந்தேகம் ஏற்பட்டது.
- மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்ததால் காமாட்சியை விடுவித்து விட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
பெரியகுளம்:
பெரியகுளம் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நாயின் முதுகில் இந்திய தேசிய கொடியை கட்டிவிட்டு உலவவிட்டனர். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. தேச விரோத செயல்களில் ஈடுபடும் இதுபோன்ற நபர்களை கைது செய்ய வேண்டும் என தேனி மாவட்ட பா.ஜ.க மாநில செயற்குழு உறுப்பினர் ராஜபாண்டியன் பெரியகுளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் நகரின் முக்கிய வீதிகளில் இருந்த கண்காணிப்பு கேமரா மற்றும் அந்த நாய் எங்கெல்லாம் சென்று வந்தது என்பது குறித்து விசாரணை நடத்தினர்.
அப்போது பெரியகுளம் நேரு நகர் சாந்தகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த காமாட்சி(49) என்பவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை பிடித்து விசாரித்ததில் தான் குடிபோதையில் இதுபோன்ற செயலில் ஈடுபட்டதாக தெரிவித்தார். இதனைதொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். ஆனால் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்ததால் காமாட்சியை விடுவித்து விட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இதுகுறித்து பா.ஜ.க நிர்வாகிகள் தெரிவிக்கையில், உண்மையான குற்றவாளிகளை பிடிக்காமல் வேறு ஒருவரை பிடித்து அவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்காமல் போலீசார் விடுவித்து விட்டதாக குற்றம்சாட்டினர்.