நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை- மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிரடி உயர்வு
- கர்நாடக- தமிழக எல்லையில் வடகிழக்கு பருவ மழை தொடர்ந்து பெய்து வருகிறது.
- ஒரே நாளில் 11 ஆயிரம் கன அடி நீர் அதிகரித்துள்ளது.
மேட்டூர்:
கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பொழிந்து அங்குள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய அணைகளில் தண்ணீர் போதுமான அளவு நிரம்பிய பிறகே உபரி நீர் தமிழகத்திற்கு திறந்து விடப்படுகிறது. இந்த உபரி நீர் காவிரி ஆறு வழியாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வந்தடைகிறது.
தற்போது கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் வி மழை பெய்து வருகிறது. இதனால் கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளில் இருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
அதுபோல் கர்நாடக- தமிழக எல்லையில் வடகிழக்கு பருவ மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 4,938 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 6,445 கன அடியாக அதிகரித்தது. இன்று காலையில் நீர்வரத்து மேலும் அதிகரித்து வினாடிக்கு 17,596 கன அடி வீதம் தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. ஒரே நாளில் 11 ஆயிரம் கன அடி நீர் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேட்டூர் அணையில் இருந்து தமிழக காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 7 ஆயிரம் கன அடியும், கிழக்கு- மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 500 கன அடி நீரும் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் நீர்மட்டம் உயர தொடங்கியுள்ளது. நேற்று காலை 89.26 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 8 மணி அளவில் நீர்மட்டம் 89.92 அடியாக உயர்ந்தது. நீர் இருப்பு 52.55 டி.எம்.சி. உள்ளது.