தமிழ்நாடு (Tamil Nadu)

ஆலந்தூர் மண்டலத்தில் ரூ.311.61 கோடி மதிப்பீட்டில் வெள்ளத்தடுப்பு பணிகள் நிறைவேற்றம்- அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்

Published On 2024-10-16 07:17 GMT   |   Update On 2024-10-16 07:17 GMT
  • ஓடையின் நீர் வரத்து தடைப்பட்டால் உடனுக்குடன் சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  • 12 டிப்பர் லாரிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

சென்னை:

அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆலந்தூர் மண்டலத்திற்கு உட்பட்ட மாதவபுரம், வ.உ.சி நகர், ஜீவன் நகர், வீராங்கல் ஓடை உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறியதாவது:-

ஆலந்தூர் மண்டலத்திற்கு உட்பட்ட அய்யப்பன் தாங்கல், பரணிபுத்தூர், மவுலிவாக்கம், கொளப்பாக்கம், முகலிவாக்கம், மணப்பாக்கம் ஆகிய பகுதிகள் போரூர் ஏரியின் உபரிநீர் வெளியேற்றத்தால் பாதிக்கப்படுவதை தடுக்க ரூ.204.93 கோடி மதிப்பில் மழைநீர் வடிகால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளது. வாய்க்கால்களின் மதகுகள் சீராக இயங்குமாறு தயார் நிலையில் வைத்திருக்க அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

ஆதம்பாக்கம், பழவந்தாங்கல், வானுவம்பேட்டை, நங்கநல்லூர் வீராங்கல் ஓடையால் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்ய ரூ.13.80 கோடி மதிப்பில் அதன் கரைகளை பலப்படுத்துப்படும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. ஓடையின் நீர் வரத்து தடைப்பட்டால் உடனுக்குடன் சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆலந்தூர் மண்டலத்தில் ரூ.83 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால் பணிகளையும், ரூ.9.88 கோடி மதிப்பீட்டில் கண்ணன் காலனி, ஆலந்தூர் மாதவரம் ஆகிய இடங்களில் கழிவுநீர் உந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆலந்தூர் மண்டலத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 13 அவசர கால குழுக்களும், சுமார் 2 ஆயிரம் பொதுமக்கள் தங்கும் வகையில் 13 நிவாரண முகாம்கள், 3 பொது சமையல் கூடங்கள், 52 மோட்டார் பம்புகள், 37 மரம் வெட்டும் எந்திரங்கள், 5 மண் நிரம்பும் எந்திரங்கள், 12 டிப்பர் லாரிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News