தமிழ்நாடு (Tamil Nadu)

திண்டுக்கல்லில் பூரான் கிடந்த வடையை சாப்பிட்ட சிறுவனுக்கு வாந்தி, மயக்கம்

Published On 2024-10-16 07:46 GMT   |   Update On 2024-10-16 07:46 GMT
  • தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் இனிப்பு, காரம் உள்ளிட்டவை தயாரிக்கும் திடீர் கடைகளும் முளைத்து வருகின்றன.
  • உணவு பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா? என தெரியவில்லை.

வடமதுரை:

திண்டுக்கல் என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்த பியூலா என்ற பெண் தனது 3 வயது மகனுடன் அதே பகுதியில் உள்ள பேக்கரியில் வடை சாப்பிட சென்றார். சிறுவனுக்கு வடையுடன் குருமா ஊற்றி கொடுத்துள்ளனர்.

பாதி வடையை சாப்பிட்ட பின்னர் அதில் பூரான் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து தனது தாயிடம் தெரிவித்தான். அவர் கடைக்காரரிடம் வடையில் பூரான் கிடப்பதை காட்டி கேட்டார். ஆனால் அவர்கள் முறையான பதில் அளிக்காமல் அலட்சியமாக பேசியுள்ளனர்.

இந்த நிலையில் சிறுவனுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திண்டுக்கல் நகரில் ஏராளமான சாலையோர கடைகள் உள்ளன. இதில் பெரும்பாலான கடைகளில் சுகாதாரம் என்பது துளியளவு கூட கிடையாது. தற்போது மழை பெய்து வருவதால் பூரான், பல்லி, பூச்சி உள்ளிட்ட விஷ சந்துகள் ஆங்காங்கே ஊர்ந்து வருகின்றது. பெரும்பாலான சாலையோர கடைகளில் உணவு பொருட்கள் தரையிலேயே வைக்கப்படுகின்றன. இதனால் பூச்சிகள் அதில் விழும் அபாயம் உள்ளது.

மேலும் தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் இனிப்பு, காரம் உள்ளிட்டவை தயாரிக்கும் திடீர் கடைகளும் முளைத்து வருகின்றன. இதில் உணவு பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா? என தெரியவில்லை. இதுபோன்ற தரம் குறைந்த உணவுகளை உண்பதால் பொதுமக்களுக்கு வயிற்று போக்கு உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டு வருகின்றது.

எனவே திண்டுக்கல் நகரில் உள்ள ஓட்டல்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனையிட்டு உணவின் தரத்தை உறுதி செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News