கருணை மதிப்பெண் ரத்து நீட் ஊழலில் இருந்து தப்பிப்பதற்கான முயற்சி: மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு
- நீட் தேர்வில் 1563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது.
- நீட் தேர்வை ரத்து செய்து மீண்டும் தேர்வு நடத்த வலியுறுத்தல்.
நீட் தேர்வில் 1563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது. இதற்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், மத்திய தேர்வு முகமை (NTA) ஊழலில் ஈடுபட்டது என எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது.
இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய தேர்வு முகமை சார்பில், மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண் ரத்து செய்யப்படும். அவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தப்படும். தேர்வு எழுத விரும்பாத மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் இல்லாமல் தேர்வில் சரியான பதில் அளிக்கப்பட்டதற்கான மதிப்பெண் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் பதிவிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:-
கருணை மதிப்பெண்களை ரத்து செய்வதன் மூலம் சமீபத்திய நீட் ஊழலில் இருந்து தப்பிக்க மத்திய அரசு முயற்சிப்பது அவர்களின் சொந்த திறமையின்மையிக்கான மற்றொரு ஒப்புதலாகும்.
மாநிலங்களின் உரிமையைப் பறித்த பிறகு, முறைகேடுகள் மற்றும் துறைக்கு தொடர்பில்லாதவர்களால் தேர்வுகளை நடத்துதல் போன்ற முக்கிய பிரச்சனைகளில் இருந்து கவனத்தை திசை திருப்ப அனுமதிக்கக் கூடாது.
அவர்களின் திறமையின்மையையும், லட்சக்கணக்கான மாணவர்களின் வேதனையில் அக்கறையின்மையையும் கண்டிக்கும் அதே வேளையில், மருத்துவ படிப்புகளுக்கான தேர்வு முறையைத் தீர்மானிப்பதில் மாநில அரசுகளின் பங்கை மீட்டெடுப்பதுதான் இந்தப் பிரச்சினைக்கு ஒரே தீர்வு என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம்.
இவ்வாறு மு.க. ஸ்டாலின் அதில் தெரிவித்துள்ளார்.