தமிழ்நாடு

வீட்டில் இருந்த பெண் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

Published On 2024-06-10 08:45 GMT   |   Update On 2024-06-10 08:45 GMT
  • அமுதா கொடுத்த புகாரின் பேரில் சந்தோசை போலீசார் கைது செய்தனர்.
  • 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

அண்ணாநகர்:

சென்னை டி.பி.சத்திரம் 9-வது தெருவில் வசித்து வருபவர் அமுதா (29). இவர் நேற்று இரவு வீட்டில் இருந்தார்.

அப்போது 3 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து அதில் இருந்தவாறே பெட்ரோல் குண்டை வீட்டின் மீது வீசி விட்டு தப்பி சென்றனர்.

அமுதா மீது வீசப்பட்ட பெட்ரோல் குண்டு தவறி வேறு இடத்தில் விழுந்தது. இதனால் அவர் விபத்தில் இருந்து தப்பினார். பெட்ரோல் குண்டு வீசியதில் ஏற்பட்ட சத்தத்தில் அந்த தெருவில் உள்ள அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி அமுதா டி.பி.சத்திரம் போலீசில் புகார் செய்தார்.

அந்த பகுதியில் கஞ்சா புகைத்த வாலிபர்களை கண்டித்ததால் தன்னை கொலை செய்வதற்காக இந்த சம்பவம் நடந்துள்ளதாக அவர் புகாரில் கூறியிருந்தார். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தியதில் பெட்ரோல் குண்டு வீசிய வாலிபர்கள் 3 பேரும் அதே பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது.

சந்தோஷ் (24), மனோஜ் குமார் (20) உள்பட 3 பேர் அதே வீட்டின் முன் பகுதியில் இருந்து கஞ்சா புகைத்து உள்ளனர். இதனை அவர் கண்டித்துள்ளார். இந்த சம்பவம் கடந்த ஆண்டு நடந்துள்ளது.

இதுகுறித்து அமுதா கொடுத்த புகாரின் பேரில் சந்தோசை போலீசார் கைது செய்தனர். இதனால் அவரை பழி வாங்குவதற்காக இந்த செயலில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.

கடந்த சில மாதங்களாக சிறையில் இருந்து வந்த சந்தோஷ் நண்பர்களுடன் சோந்து அமுதாவின் அக்கா கணவரை தாக்கி உள்ளார்.

அந்த வழக்கில் 3 பேரும் கைது செய்யப்பட்டு சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். அதன் பிறகும் அவருக்கு அமுதா குடும்பத்தின் மீது கோபம் தீரவில்லை.

இந்த நிலையில் தான் நேற்று இரவு நண்பருடன் சென்று பெட்ரோல் குண்டை வீசி உள்ளனர். 3 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News