தமிழ்நாடு (Tamil Nadu)

திருப்பத்தூர் சாலை விபத்து: மீட்பு பணியில் ஈடுபட்ட போலீஸ்காரர் மயங்கி விழுந்து பலி

Published On 2023-11-11 05:28 GMT   |   Update On 2023-11-11 05:30 GMT
  • திருப்பத்தூர் சாலை விபத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டவர் ஏட்டு முரளி.
  • மீட்பு பணி முடிந்து வாணியம்பாடி வந்த அவர், நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.

திருப்பத்தூர்:

ஆம்பூர் ஏ. கஸ்பாவைச் சேர்ந்தவர் முரளி (42). வாணியம்பாடி போலீஸ் நிலையத்தில் ஏட்டாகப் பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி, மகள், மகன் உள்ளனர்.

இந்நிலையில், இன்று அதிகாலை வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூர் தேசிய நெடுஞ்சாலையில் நடந்த பஸ்கள் மோதி விபத்துக்குள்ளான இடத்திற்கு முரளி சென்றார்.

பலியானவர்களின் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். பின்னர் வாணியம்பாடி போலீஸ் நிலையத்திற்கு வந்தார். அப்போது திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு போலீஸ் நிலையத்திலேயே மயங்கி கீழே விழுந்தார்.

சக போலீசார் அதிர்ச்சி அடைந்து மயங்கி விழுந்த முரளியை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று காலை முரளி பரிதாபமாக இறந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் மற்றும் வேலூர் சரக டிஐஜி முத்துசாமி விசாரணை நடத்தினர். போலீஸ் நிலையத்தில் ஏட்டு மயங்கி விழுந்து இறந்த சம்பவம் போலீசார் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News