இந்தியா (National)

ஒடிசாவில் பூரி ரத யாத்திரை கோலாகல கொண்டாட்டம்

Published On 2024-07-07 16:41 GMT   |   Update On 2024-07-08 01:39 GMT
  • ஜனாதிபதி திரவுபதி முர்மு, ஒடிசா கவர்னர் ரகுபர் தாஸ் உள்ளிட்டோர் தரிசனம் செய்தனர்.
  • 3 கி.மீ. தொலைவில் உள்ள குண்டிச்சா கோவிலை சென்றடைந்ததும் ஜெகநாதர் ஓய்வெடுப்பார்.

ஜெகநாத ரதயாத்திரை ஒடிசா நகரில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் ஒரு பிரபலமான இந்து பண்டிகையாகும். இதில் ஜெகநாத ரதயாத்திரையில் கலந்து கொள்ள ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள புகழ்பெற்ற ஜெகநாதர் கோவிலில் ஆண்டுதோறும் ரத யாத்திரை மிக பிரமாண்டமாக நடைபெறும். ஜெகநாதரின் 12 யாத்திரைகளில் ரத யாத்திரை மிகவும் புனிதமானது மற்றும் மிகவும் பிரபலமானது.

மூலவர்களான பாலபத்திரர் (பலராமர்) அவரின் சகோதரர் ஜெகநாதர் (கிருஷ்ணர்), சகோதரி சுபத்ரா ஆகியோர் தனித்தனி தேர்களில் எழுந்தருளி, பூரி நகரத்தை யாத்திரையாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள்.

இந்த ஆண்டுக்கான ரத யாத்திரை இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது. மாலையில் பூரி சங்கராச்சாரியார் சுவாமி நிச்சலநாத சரஸ்வதி தனது சீடர்களுடன் ஜெகநாதர், பாலபத்திரர் மற்றும் தேவி சுபத்ரா ஆகியோரின் தேர்களை தரிசனம் செய்தனர்.

இந்த சடங்கு முடிந்ததும், மாலை 5.20 மணியளவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, ஒடிசா கவர்னர் ரகுபர் தாஸ், ஒடிசா முதல்-மந்திரி மோகன் சரண் மாஜி, மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் ஆகியோர் ஜெகநாதர் தேரின் வடம் பிடித்து இழுத்து ரத யாத்திரையை முறைப்படி தொடங்கி வைத்தனர்.

அதன்பின் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தேர்களை இழுக்கத் தொடங்கினர். முதலில் பாலபத்திரர் தேர் இழுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சுபத்ரா தேர், அதன்பின் ஜெகநாதர் தேர் இழுக்கப்பட்டது. வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்ட மூன்று தேர்களும் பூரி நகரின் வீதிகளில் அசைந்தாடி செல்லும் காட்சியை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

9 நாட்கள் இந்த திருவிழா நடக்கும். தங்கள் இருப்பிடத்தில் இருந்து புறப்படும் ஜெகநாதர், பாலபத்திரர், சுபத்ரா ஆகியோர் 2 கி.மீ.

தொலைவில் உள்ள தங்களின் அத்தை கோவிலான மவுசிமா கோவிலுக்கு சென்று ஓய்வு எடுப்பார்கள். பின்னர் அங்கிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள குண்டிச்சா கோவிலை சென்றடைந்ததும் ஜெகநாதர் ஓய்வெடுப்பார்.

திருவிழாவின் 4 நாளில் தனது கணவர் ஜெகநாதரை காண லட்சுமி தேவி, குண்டிச்சா கோவிலுக்கு வருகை தருவார். அதை தொடர்ந்து மீண்டும் தேர்கள் புறப்பட்டு ஜெகநாதர் கோவிலை வந்தடைந்ததும் விழா நிறைவுபெறும்.

Tags:    

Similar News