தமிழ்நாடு

திண்டுக்கல் அருகே மின்சாரம் தாக்கி பள்ளி மாணவி உயிரிழப்பு

Published On 2022-09-22 08:42 GMT   |   Update On 2022-09-22 08:42 GMT
  • இன்று காலை வழக்கம் போல் பெரியசாமியும், முத்துராணியும் வேலைக்கு சென்று விட்டனர்.
  • தவதர்ஷினி குளிப்பதற்காக ஹீட்டரில் தண்ணீர் சுட வைத்தார்.

வடமதுரை:

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள போஜனம்பட்டி ஏ.வி. பட்டியைச் சேர்ந்தவர் பெரியசாமி. செங்கல் சூளையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி முத்துராணி. தனியார் மில்லில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். முதல் மகளான தவதர்ஷிணி (வயது 13) அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இன்று காலை வழக்கம் போல் பெரியசாமியும், முத்துராணியும் வேலைக்கு சென்று விட்டனர். தவதர்ஷினி குளிப்பதற்காக ஹீட்டரில் தண்ணீர் சுட வைத்தார்.

சிறிது நேரம் கழித்து தண்ணீர் சூடேறி விட்டதா என்பதை பார்க்க கை வைத்தபோது மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட தவதர்ஷிணி படுகாயமடைந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர் மாணவியை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர்.

ஆனால் வரும் வழியிலேயே மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வடமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News