தமிழ்நாடு

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 6 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

Published On 2024-09-07 06:08 GMT   |   Update On 2024-09-07 06:08 GMT
  • குண்டேரிப்பள்ளம், வரட்டுப்பள்ளம் அணை தனது முழு கொள்ளளவை நெருங்கி வருகிறது.
  • 41.75 அடி கொள்ளளவு கொண்ட குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 40.38 அடியாக உள்ளது.

ஈரோடு:

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. பவானிசாகர் அணையில் இருந்து தொடர்ந்து நீர்வரத்தை விட பாசனத்திற்காக அதிக அளவு நீர் திறக்கப்பட்டு வருவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் சரிய தொடங்கியுள்ளது.

இந்நிலையில் நேற்று பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரியில் பரவலாக மழை பெய்ததால் இன்று பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இன்று காலை பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 6,431 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்து வருகிறது. காலை நிலவரப்படி பவானி சாகர் அணை நீர்மட்டம் 95.78 அடியாக உள்ளது.

குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி, தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 750 கனஅடி, காளிங்கராயன் வாய்க்கால் பாசனத்திற்கு 200 கனஅடி, கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 2,300 கனஅடி என மொத்தம் 3,350 கனஅடி தண்ணீர் அணையில் இருந்து திறந்து விடப்பட்டு வருகிறது.

இதேபோல் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதன் காரணமாக குண்டேரிப்பள்ளம், வரட்டுப்பள்ளம் அணை தனது முழு கொள்ளளவை நெருங்கி வருகிறது.

41.75 அடி கொள்ளளவு கொண்ட குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 40.38 அடியாக உள்ளது. இதேபோல் 33.47 அடி கொள்ளளவு கொண்ட வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 33.17 அடியாக உயர்ந்து உள்ளது.

Tags:    

Similar News