தமிழ்நாடு

நெல்லை சந்திப்பில் ஏ.டி.எம்-மில் பணம் எடுத்து தருவதாக பெண்ணிடம் ரூ.21 ஆயிரம் மோசடி- வாலிபர் கைது

Published On 2022-07-22 05:36 GMT   |   Update On 2022-07-22 09:27 GMT
  • நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி மலர்விழி.
  • திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த சரவணன் (வயது 32) என்பது தெரியவந்தது.

நெல்லை:

நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி மலர்விழி (வயது 52).

இவர் கடந்த 10 நாட்களுக்கு முன் சந்திப்பு பஸ் நிலையம் பகுதியில் உள்ள அரசு வங்கி ஏ.டி.எம். -மில் பணம் எடுப்பதற்காக நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு டிப்-டாப்பாக வந்த நபர் ஒருவர் மலர்விழிக்கு பணம் எடுத்துக் கொடுக்க உதவி செய்வதாக கூறியுள்ளார்.

இதையடுத்து அவரிடம் ஏ.டி.எம். கார்டை கொடுத்த போது பணம் வரவில்லை என்று கூறியுள்ளார். இதனால் மலர்விழி திரும்பி சென்றார். ஆனால் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.21 ஆயிரம் எடுக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இது தொடர்பாக அவர் சந்திப்பு போலீசில் புகார் தெரிவி்த்தார். இதைத் தொடர்ந்து போலீசார் ஏ.டி.எம். அறையில் உள்ள சி.சி.டி.வி. கேமிராவை ஆய்வு செய்ததில் மலர்விழியிடம் பணத்தை 'அபேஸ்' செய்த நபர் அடையாளம் தெரிந்தது.

அந்த நபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இதனிடையே சந்திப்பு பஸ் நிலையம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து போலீசார் அந்த நபரை அடையாளம் கண்டு உடனடியாக சந்திப்பு குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று அந்த வாலிபரை மடக்கிப் பிடித்தனர். விசாரணையில் அவர் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த சரவணன் (வயது 32) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News