தமிழ்நாடு

மதுரை ரெயில் தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம்: முதலமைச்சர் அறிவிப்பு

Published On 2023-08-26 07:00 GMT   |   Update On 2023-08-26 09:15 GMT
  • உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல்.
  • உயிரிழந்தவர்களின் உடல்களை அவர்களது சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்ல தக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

சென்னை:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

உத்தரப் பிரதேச மாநிலம் சித்தூரிலிருந்து ராமேஸ்வரத்திற்கு வந்த ஆன்மிக சிறப்பு சுற்றுலா ரெயிலில் நாகர்கோவில் ரெயில் நிலையத்திலிருந்து கூடுதலாக பெட்டிகள் இணைக்கப்பட்டு மதுரை ரெயில் நிலையத்தில் இன்று அதிகாலை நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் அதில் பயணித்த பயணிகள் சமையல் செய்துகொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீவிபத்தில் 9 பேர் உயிரிழந்தனர் என்ற வேதனையான செய்தியினை கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.

மதுரை மாவட்ட ஆட்சியரை உடனடியாக விபத்து நடந்த இடத்திற்குச் சென்று உரிய மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும், காயமடைந்தவர்களுக்கு மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தியுள்ளேன்.

உயிரிழந்தவர்களின் உடல்களை அவர்களது சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்ல தக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களது குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News