அடுத்த மாதம் முதலமைச்சர் தருமபுரி வருகை: அரசு விழாவிற்கு இடம் தேர்வு செய்யும் பணி தீவிரம்
- தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களை கலெக்டர் சாந்தி தலைமையிலான அதிகாரிகள் பார்வையிட்டு வருகின்றனர்.
- விழா மேடை மற்றும் பிரமாண்ட பந்தல் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யும் பணியில் கலெக்டர் சாந்தி மற்றும் அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர்.
தருமபுரி:
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த மாதம் 11-ந்தேதி தருமபுரி வருகிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
அரசு சார்பில் நடைபெறும் விழாவில் முதலமைச்சர் கலந்து கொண்டு முடிவுற்ற பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்தும், புதிய திட்டப்பணிகளையும் தொடங்கி வைக்கிறார். இந்த விழாவுக்கு மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிக்கான இடம் தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களை கலெக்டர் சாந்தி தலைமையிலான அதிகாரிகள் பார்வையிட்டு வருகின்றனர். அதன்படி நல்லம்பள்ளி ஒன்றியம்பாளையம் புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் விழா மேடை மற்றும் பிரமாண்ட பந்தல் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யும் பணியில் கலெக்டர் சாந்தி மற்றும் அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர்.
மேலும் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தடங்கம் சுப்பிரமணி, உதவி கலெக்டர் காயத்ரி, தாசில்தார் பார்வதி ஆகியோர் அந்த பள்ளியில் போதுமான இடம் வசதி உள்ளதா? என்பது குறித்து ஆலோசனை நடத்தினர்.
அப்போது முன்னாள் ஒன்றிய செயலாளர் துரைசாமி, மாவட்ட துணை செயலாளர் ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர் நட்ராஜ், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் கவுதம், பிளாஸ்டிக் செல்வம், நவீன் குமார் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.