கள்ளச்சாராய உயிர்பலி உயர்வு.. கருப்பு சட்டையுடன் சட்டமன்றம் வந்த இ.பி.எஸ்.. எம்.எல்.ஏ.க்களுடன் தீவிர ஆலோசனை
- சட்டசபை கூட்டம் தொடங்கியதும் முதலில் கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட இருக்கிறது.
- கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறியதாக தமிழக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கருப்பு உடை அணிந்து சட்டசபைக்கு வந்தனர்.
சென்னை:
தமிழக சட்டசபை நேற்று தொடங்கியது. அவை தொடங்கியதும் மறைந்த சட்டமன்ற உறுப்பினர்கள், குவைத் தீவிபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. பின்னர் அவை உறுப்பினர்கள் எழுந்து நின்று 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்திய பின்னர் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து இன்று காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கியதும் முதலில் கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட இருக்கிறது.
இந்நிலையில், கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறியதாக தமிழக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கருப்பு உடை அணிந்து சட்டசபைக்கு வந்தனர். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் கருப்பு உடை அணிந்து வந்தார்.
இதையடுத்து, சட்டசபை வளாகத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டார். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் தொடர்பாக சட்டசபையில் உரையாற்றுவது குறித்து ஆலோசனையில் ஈடுபடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் இன்று கூடும் சட்டசபை கூட்டத்தொடரில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.