தமிழ்நாடு (Tamil Nadu)

தீபாவளிக்கு மறுநாள் 25-ந் தேதி விடுமுறைவிட அரசு பரிசீலனை

Published On 2022-10-18 07:07 GMT   |   Update On 2022-10-18 07:07 GMT
  • திங்கட்கிழமை தீபாவளி வருவதால் தொடர்ச்சியாக 3 நாட்கள் அரசு விடுமுறை என்பதால் வெளியூர் பயணம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
  • 21-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாலையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்லக்கூடும் என்பதால் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

சென்னை:

தீபாவளி பண்டிகை 24-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. பண்டிகையை கொண்டாட பெரும்பாலானவர்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

அரசு பஸ்கள், ரெயில்கள், ஆம்னி பஸ்கள் மற்றும் சொந்த வாகனங்களில் சென்னையில் இருந்து சுமார் 10 லட்சம் பேர் பயணம் செய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தீபாவளிக்கு முந்தைய சனி, ஞாயிறு (22, 23-ந்தேதி) விடுமுறை நாட்களாகும். திங்கட்கிழமை தீபாவளி வருவதால் தொடர்ச்சியாக 3 நாட்கள் அரசு விடுமுறை என்பதால் வெளியூர் பயணம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. 21-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாலையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்லக்கூடும் என்பதால் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

தீபாவளிக்கு சென்றவர்கள் சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்ப வசதியாக 25, 26-ந்தேதிகளில் கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அவற்றிற்கு முன்பதிவும் நடந்து வருகிறது.

தீபாவளிக்கு மறுநாள் 25-ந்தேதி பள்ளி, கல்லூரிகள் மட்டுமின்றி அரசு துறைகளும் செயல்படுகிறது. அதனால் விடுமுறையில் சென்றவர்கள் உடனே ஊர் திரும்ப வேண்டிய நிலை உள்ளது. போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என்பதால் மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வதில் சிரமம் ஏற்படக்கூடும்.

அதனை கருத்தில் கொண்டு தீபாவளிக்கு மறுநாள் 25-ந்தேதி அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என பல்வேறு அரசு சங்கங்கள் கோரிக்கை வைத்துள்ளன.

அதன் அடிப்படையில் 25-ந்தேதி விடுமுறை விடலாமா? என்று அரசு பரிசீலனை செய்கிறது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் பள்ளி, கல்லூரி மாணவர்கள் நெரிசல் இல்லாமல் பயணம் தொடரவும் ஊர் திரும்பவும் 25-ந் தேதி விடுமுறை விடுவதற்கு வாய்ப்பு உள்ளது.

கடந்த 2 ஆண்டுகள் தீபாவளிக்கு முந்தைய நாட்கள் விடுமுறை விடப்பட்டு தொடர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டதால் சொந்த ஊரில் இருந்து திரும்ப வசதியாக இருந்தது.

அதுபோல இந்த ஆண்டும் விடுமுறை விடுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. இந்த விடுமுறையை நவம்பர் 12-ந்தேதி இரண்டாவது சனிக்கிழமை அன்று வேலைநாளாக அறிவிக்கலாம் எனவும் அரசு ஆலோசித்து வருகிறது.

தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை குறித்த அறிவிப்பு ஓரிரு நாட்களில் வரும் என்று அரசு துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tags:    

Similar News