தமிழ்நாடு

ஒகேனக்கல்லில் நீர்வரத்து 2000 கனஅடியாக அதிகரிப்பு

Published On 2024-06-07 06:12 GMT   |   Update On 2024-06-07 06:12 GMT
  • நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல்லில் மெயின் அருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் சீறிபாய்ந்து செல்கிறது.
  • கோடைவிடுமுறை முடிய இன்னும் 2 நாட்கள் இருப்பதாலும் ஒகேனக்கல்லில் இன்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

ஒகேனக்கல்:

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வருகிறது.

கர்நாடக மாநிலத்திலும், காவிரி கரையோர நீர் பிடிப்பு பகுதிகளிலும் கோடைடமழை பெய்து வருவதால் தமிழக-கர்நாடகா எல்லை பகுதியான பிலிகுண்டுலுவில் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.

இந்த நீர்வரத்தால் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரித்தது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒகேனக்கல்லில் நீர்வரத்து 1000 ஆயிரம் கனஅடியாக நீடித்து வந்தது.

இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, நாட்றாம்பாளையம், ஊட்டமலை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை காரணமாக இன்று காலை நிலவரப்படி ஒகேனக்கல்லில் நீர்வரத்து சற்று அதிகரித்து வினாடிக்கு 2000 கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது.

நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல்லில் மெயின் அருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் சீறிபாய்ந்து செல்கிறது.

வருகிற 10-ந்தேதி பள்ளி திறப்பாலும், கோடைவிடுமுறை முடிய இன்னும் 2 நாட்கள் இருப்பதாலும் ஒகேனக்கல்லில் இன்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர். ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பால் சுற்றுலா பயணிகள் பரிசல் நிலையத்தில் இருந்து ஊட்டமலை, ஐந்தருவி, அத்திமரத்துகடுவு ஆகிய பகுதி வரை பரிசலில் சென்று மகிழ்ந்தனர். இதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் முதலைப்பண்ணை, தொங்கும் பாலம் ஆகிய பகுதிகளுக்கு சென்று சுற்றி பார்த்தனர். பின்னர் அவர்கள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை காரணமாக ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரித்து வருவதால் பிலிக்குண்டுலுவில் தொடர்ந்து மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் நீர்வரத்தை கண்காணித்து வருகின்றனர்.

Tags:    

Similar News