தமிழ்நாடு (Tamil Nadu)

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 3000 கனஅடியாக நீடிப்பு

Published On 2024-05-17 04:04 GMT   |   Update On 2024-05-17 04:04 GMT
  • நீர்வரத்தானது பெய்யும் மழையை பொறுத்தே அதிகரிக்கவோ அல்லது குறையவோ வாய்ப்பு உள்ளது.
  • ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்ததால், கோடை கால சீசனில் இந்த முறை சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்க தொடங்கி உள்ளது.

ஒகேனக்கல்:

கர்நாடகா மாநிலம் மற்றும் தமிழக-கர்நாடகா எல்லைப் பகுதியான பிலிகுண்டுலுவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் நேற்று கனமழை பெய்தது. இதன் காரணமாக காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

இந்த நீர்வரத்து ஒகேனக்கல், அஞ்செட்டி, நாட்றம்பாளையம், ஓசூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் உள்ள மலை குன்றுகளில் பெய்த மழையின் காரணமாகவும், காவிரி கரையோர எல்லைப் பகுதியில் பெய்த மழையின் காரணமாகும் அதிகரித்து உள்ளது.

காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பால் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் பகுதியிலும் நீர்வரத்து அதிகரித்து வர தொடங்கியது.

இந்த நிலையில் நேற்று காலை ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு ஆயிரம் கனஅடியாக இருந்த நிலையில் கனமழை காரணமாக படிப்படியாக அதிகரித்து நேற்று இரவு 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 3 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

தொடர்ந்து இன்று காலை நிலவரப்படி 3 ஆயிரம் கன அடியாக நீடித்து வருகிறது. இதன் காரணமாக மெயின்அருவி, சினிபால்ஸ் ஆகிய அருவிகளில் தண்ணீர் சீறி பாய்ந்து சென்றது. காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

இந்த நீர்வரத்தானது பெய்யும் மழையை பொறுத்தே அதிகரிக்கவோ அல்லது குறையவோ வாய்ப்பு உள்ளது. எனவே, தொடர்ந்து மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் பிலிக்குண்டுலுவில் காவிரி ஆற்றில் நீர்வரத்தை கண்காணித்து வருகின்றனர்.

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்ததால், கோடை கால சீசனில் இந்த முறை சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்க தொடங்கி உள்ளது. எனவே, மீன் சமையல் தொழிலாளர்கள், வியாபாரிகள், பரிசல் ஓட்டிகள், மசாஜ் தொழிலாளிகள் என அனைத்து தொழிலாளர்களும் மகிழ்ச்சியடைந்தனர்.

Tags:    

Similar News