தமிழ்நாடு (Tamil Nadu)

பிரதமரை இனி மிஸ்டர் 29 பைசா மோடி என்றே அழைக்க வேண்டும்- உதயநிதி ஸ்டாலின்

Published On 2024-04-05 07:43 GMT   |   Update On 2024-04-05 07:43 GMT
  • உத்தரபிரதேசம் மாநிலத்திற்கு ஒரு ரூபாய் ஜிஎஸ்டி வரி கட்டினால் மூன்று ரூபாய் திரும்ப கொடுக்கிறது
  • மாநில உரிமைகளை மீட்டெடுக்க வேண்டுமென்றால் நாம் இந்திய கூட்டணியை வெற்றி பெற செய்ய வேண்டும்.

பட்டுக்கோட்டை:

தஞ்சை பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் முரசொலியை ஆதரித்து இன்று பட்டுக்கோட்டையில் இளைஞரணி செயலாளரும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் செய்தார்.

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு மோடி உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பரிசு என்பது கேஸ் சிலிண்டர் விலை ரூ.100 குறைத்தது மட்டுமே. ஆனால் அவர்கள் ஆட்சிக்கு வரும் முன்பு கேஸ் சிலிண்டர் விலை ரூ.450-ஆக இருந்தது. தற்போது ரூ.1200 என்பதை மறந்து விட கூடாது. 100 ரூபாய் குறைத்து ஏமாற்ற பார்க்கிறார்கள்.

இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும். கியாஸ் சிலிண்டர் விலை 500 ரூபாய்க்கு கொடுக்கப்படும். பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75 , டீசல் ரூ.65 -க்கு கொடுக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதி கொடுத்துள்ளார். அதனை உறுதியாக அவர் நிறைவேற்றி தருவார்.

ஜி.எஸ்.டி தொகை ஒரு ரூபாய் என்றால் நமது மாநிலத்திற்கு மத்திய அரசு கொடுக்கும் தொகை 29 பைசா மட்டுமே. ஆனால் பா.ஜனதா ஆளும் அதே உத்தரபிரதேசம் மாநிலத்திற்கு ஒரு ரூபாய் ஜிஎஸ்டி வரி கட்டினால் மூன்று ரூபாய் திரும்ப கொடுக்கிறது. நிதீஷ் குமார் ஆட்சி செய்யும் பீகார் மாநிலத்திற்கு ஒரு ரூபாய் ஜிஎஸ்டி வரி கட்டினால் 7 ரூபாய் அவர்களுக்கு திருப்பி கொடுக்கிறது. அதனால்தான் அடுத்த முறை மோடியை நீங்கள் சந்திக்கும் போது மிஸ்டர் 29 பைசா என்று கூப்பிடுங்கள் என்று கூறுகிறேன் .

ஏனென்றால் இந்த 29 பைசா என்பது இன்று செல்லாக்காசு. வரும் தேர்தலுக்குப் பிறகு மோடியும் செல்லாக்காசாகி விடுவார். இந்த முறை 40-க்கு 40 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். மாநில உரிமைகளை மீட்டெடுக்க வேண்டுமென்றால் நாம் இந்திய கூட்டணியை வெற்றி பெற செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News