வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த நளினிக்கு 7-வது முறையாக பரோல் நீட்டிப்பு
- கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27-ந்தேதி நளினிக்கு 30 நாட்கள் பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது.
- வேலூர் பெண்கள் தனிச்சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்.
வேலூர்:
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக வேலூர் பெண்கள் தனிச்சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்.
அவரது தாயார் பத்மாவதி உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் அவரை கவனித்துக்கொள்ள தனக்கு பரோல் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
இதனையடுத்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27-ந்தேதி நளினிக்கு 30 நாட்கள் பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது. பரோலில் உள்ள நளினி தனது தாயார் பத்மாவுடன் காட்பாடி அடுத்த பிரம்மபுரத்தில் தங்கியுள்ளார்.
தொடர்ச்சியாக 6 முறை நளினிக்கு பரோல் நீட்டிக்கப்பட்ட நிலையில் இன்று ஜெயிலுக்கு திரும்ப இருந்தார்.
இந்நிலையில் தனது உடல்நிலையைக் காரணம் காட்டி நளினியின் தாயார் பத்மா நளினிக்கு மேலும் பரோல் நீட்டிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு மனு அளித்தார்.
இதனைத் தொடர்ந்து நளினிக்கு 7-வது முறையாக பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் 30 நாட்கள் பரோல் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.